கந்த சஷ்டி பற்றி சர்ச்சைக்குரிய வீடியோ.. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்க- பாஜக பரபர புகார்
சென்னை: கந்த சஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒளிபரப்பிய, கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
கருப்பர் கூட்டம், யூடியூப் சேனலில் வெளியான இந்த சர்ச்சைக்குரிய வீடியோவுக்கு எதிராக ட்விட்டரில் இன்று காலை முதல் #வெற்றிவேல்_வீரவேல் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்து மத கடவுள்கள் திட்டமிட்டு அவமதிக்கப்படுவதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் பால் கனகராஜ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதை பாருங்கள்:
கந்த சஷ்டி கவசம்
கருப்பர் கூட்டம் என்ற பெயரிலான யூடியூப் சேனல் நாத்திக கருத்துக்களை பரப்பி வருகிறது. இந்த சேனலில் சமீபத்தில், 'ஆபாச புராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கந்தசஷ்டி கவசம் பாடல், ஆபாசமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் அல்லது ஸ்கந்த சஷ்டி கவசம் என்பது, இறைவன் சிவபெருமானின் மகனான கடவுள் முருகர் தொடர்பான பாடல் ஆகும். 19ம் நூற்றாண்டில் கந்தசஷ்டிகவசம் இயற்றப்பட்டது. கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பேரருளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது இந்த பாடல்.
உலக தமிழர்கள்
தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கக்கூடிய தமிழ் பேசக்கூடியவர்கள் வீடுகளில் தினமும் ஒலிக்கக் கூடிய பாடல் கந்த சஷ்டி கவசம். ஆனால், சமீபத்தில், கருப்பர் கூட்டம் என்ற இந்த யூடியூப் சேனல், நான் மேலே குறிப்பிட்ட இந்த தலைப்பின் கீழ், கந்த சஷ்டி கவசம் பற்றி மோசமாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த வீடியோவில் பேசக் கூடிய நபர் கருத்துக்களை தெரிவிக்கிறார். இந்துக் கடவுள்களின் புனிதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பாலியல் சார்ந்த வன்ம பேச்சுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்
யூடியூப் சேனலில் இவ்வாறு பேசியவர் ஜாமினில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைது செய்ய தகுதி உடையவராகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும் கூட அது கட்டுப்படுத்தப்பட்ட உரிமைதான். இந்த தண்டனைச் சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்த பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
மக்களிடையே பதற்றம் ஏற்படுத்துவது நோக்கம்
திட்டமிட்டு, மலினப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீடியோவில் அம்சங்கள் உள்ளன. இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் அதில் கருத்துக்கள் உள்ளன. மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்துவதற்காகவும், மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவதற்காகவும் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு, பரப்பப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு நிதி ஆதாரம் எங்கே இருந்து வருகிறது என்பது மர்மமாக இருக்கிறது.
பிரிவினைவாத குழுவுடன் தொடர்பு
இவர்களது அனைத்து வீடியோக்களையும் கவனித்து பார்த்தால், இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படக்கூடிய, பிரிவினைவாத எண்ணம் கொண்ட குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிகிறது. எனவே கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக கிரிமினல் குற்ற வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் பேசிய சுரேந்திர நடராஜன் என்பவர், மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த சேனல் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69a பிரிவின் கீழ் தடை செய்யப்பட வேண்டும். பக்தர்களின் குமுறலை அதிகப்படுத்தி விடாமல் இருப்பதற்காக, கூடிய விரைவில் இந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.