எங்கப்பா போறது அந்த நாலு பேருக்கு... பரபரக்கும் அதிமுக.. கிடுகிடுக்கும் பாஜக!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாஜகவிலிருந்து குறைந்தது 4 பேராவது ஜெயிச்சாகணும். அதை செய்ய வேண்டியது உங்க கடமை என்று அதிமுகவுக்கு, பாஜக தலைமை கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளதாக பரபரக்கிறது அரசியல் களம்.
என்ன செய்தாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்று வேகமாக உள்ளது பாஜக. வடக்கில் பல இடங்களில் ஓட்டை விழுந்து உடைப்பெடுத்து இருப்பதால் தெற்கில் தீவிர கவனம் செலுத்துகிறது பாஜக. குறிப்பாக தமிழ்நாடுதான் அவர்களுக்கு லம்ப்பாக கண்ணுக்குப் படுகிறது.
பெரிய ஆளுமை யாரும் இல்லாததாலும், இங்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதாலும் இதை பயன்படுத்தி அடித்து ஆடி வேண்டியதை அள்ள பாஜக திட்டமிடுவதாக சொல்கிறார்கள். அதற்கு அதிமுகவையும் அது கூட்டுக்கு அழைத்துக் கொண்டு களம் காணத் துடிக்கிறது.
நாலு பேர் கட்டாயம்
தற்போது அதிமுக மேலிடத்திலிருந்து ஒரு புது உத்தரவு அதிமுக தலைமைக்குப் போயுள்ளதாம். அதைக் கேட்டு அதிமுக தலைமை தலையில் அடித்துக் கொண்டிருக்கிறதாம். இதெல்லாம் நடக்கிற காரியமா என்பது அதிமுக தலைவர்களின் புலம்பல். அதாவது பாஜகவிலிருந்து குறைந்தது நாலு பேரை வெற்றி பெற வைக்க வேண்டுமாம். இதுதான் அதிமுகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் என்கிறார்கள்.
கூட்டணி மும்முரம்
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நிறைவு கட்டத்தை அடைந்துள்ளதோடு, கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு கூட முடிந்துவிட்டது. குமரியில் பொன்.ராதாவும், திருப்பூரில் வானதி சீனிவாசனும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
கருப்பா.. கடுப்பில் அதிமுக
தஞ்சை தொகுதியை கருப்பு முருகானந்தத்துக்கு கேட்கிறதாம் பாஜக. ஆனால் அந்த தொகுதியை கருப்பு முருகானந்தத்துக்கு கொடுக்க அதிமுக தயங்குகிறதாம். காரணத்தை விசாரித்தால் சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவராக உள்ள கருப்பு முருகானந்தம், சற்று தடாலடி பார்ட்டி என்பதாலும், லோக்கல் சர்ச்சைகளில் அதிகம் அவர் சிக்குவதாலும், வெற்றி பெறுவாரா என யோசிக்கிறதாம் அதிமுக தலைமை.
சிபி ராதாகிருஷ்ணன்
கடந்த முறை கோவை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை 3-வது இடத்துக்கு தள்ளி கணிசமான வாக்குகளை பெற்ற சி.பி.ஆர்.என்றழைக்கப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன், இம்முறை மீண்டும் கோவையில் களம் இறங்க திட்டமிட்டு அதற்காக காய் நகர்த்தி வருகிறார்.
கண்டிப்பாக ஜெயிக்கணும்
போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் குறைந்தது 4 எம்.பி.க்களாவது தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வர வேண்டும் என்பது அதிமுகவுக்கு நிர்மலா சீதாராமன் போட்டுள்ள கட்டளையாம். இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என புலம்பிக் கொண்டிருக்கிறதாம் அதிமுக தலைமை.
ஏதாவது செய்வோம்
இருப்பினும் 'எந்நன்றி கொன்றார்க்கும்' என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, டெல்லி செய்த உதவிகளை எண்ணிப்பார்த்து அதற்கு கைமாறாக நிர்மலா சீதாராமன் கட்டளையை நிறைவேற்ற அமைச்சர்கள் சுற்றி சுழல ஆரம்பித்துள்ளனராம்.