சசிகலாவால் சாதிக்க முடியும்... அதிமுகவை அடக்கி வாசிக்க பாஜக அட்வைஸ் செய்தது இதற்குதானா?
Recommended Video
சென்னை: அதிமுகவின் இரட்டை தலைமை விவகாரத்தில் எந்த 'தர்மயுத்தமும்' நடந்துவிடாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. அக்கட்சியைப் பொறுத்தவரையில் சசிகலா போன்ற ஒற்றை தலைமைதான் தங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என கணக்குப் போடுகிறதாம்.
வலதுசாரி இந்துத்துவா தத்துவத்தை பேசி வந்த பாஜக இப்போது தத்துவார்த்த பார்வையை கைவிட்டுவிட்டது. சித்தாந்தமே இல்லாமல் முற்போக்கு, மதச்சார்பின்மை என காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளை கபளீகரம் செய்வதை நாடு முழுவதும் கொள்கையாகவே கடைபிடிக்கிறது பாஜக.
திரிபுராவில் காங்கிரஸை வளைத்துப் போட்டது; மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை இழுத்தது; இதே பாணியில் தமிழகத்தில் அதிமுகவின் முதுகில் ஏறி உட்கார்ந்தது. ஆனால் திரிபுராவிலும் மேற்கு வங்கத்திலும் சாதித்ததைப் போல இங்கே பாஜகவுக்கு அதிமுகவால் வெற்றியை தர இயலவில்லை.
மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு.. தேசிய தலைவர் அமித்ஷா, துணைத் தலைவர் ராஜ்நாத் சிங்
தோற்றது இதனால்...
பாஜகவுக்கு எதிரான உணர்வு, பாஜகவின் தமிழர் விரோத போக்குகள் இயல்பாகவே தமிழர் நிலத்தில் வேர்பிடித்து இருக்கின்றன. அத்துடன் அதிமுக எனும் வலிமையற்ற தலைமையை நம்பி களத்துக்குப் போய் மண்ணைக் கவ்வியது பாஜக. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியும் படுசரிவை கண்டது.
ரஜினிகாந்த் கட்சி
தமிழகத்தில் சவாரி செய்ய நல்ல குதிரைகள் என பாஜக நினைத்துக் கொள்வது அதிமுகவையும் ரஜினிகாந்தையும்தான். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் கண்டிப்பாக நம்முடன்தான் கூட்டணி என அவரது கணக்கை செட்டில் செய்துவிட்டது பாஜக. அதிமுக எனும் ஊசலாட்ட வண்டியை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறது பாஜக.
அமைதியாக இருங்க..
தற்போது இரட்டை தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமையே போதும் என்கிற கலகக் குரல்கள் குறித்து பாஜக தரப்புக்கு வழக்கம் போல எடப்பாடியின் தூதுவர்கள் எடுத்துச் சென்றனர். இதற்காகவே அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு அமித்ஷாவை சந்தித்தும் பேசினர். அமித்ஷா தரப்பும் இப்போதைக்கு எந்த பிரச்சனையும் வராம சுமூகமாக போய்விடுங்க என கூறியிருக்கிறது.
அதிமுகவுக்கு சசிகலா தலைமை
அதே நேரத்தில்தான் இன்னொரு செய்தியையும் கவனத்துடன் அணுக வேண்டியுள்ளது. சசிகலா விரைவில் விடுதலையாகிறார் என்கிற பரபரப்பு செய்திக்குப் பின்னாலும் அரசியல் இல்லாமல் இல்லை. பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு ஒரு வலிமையான தலைமை தேவை. தற்போதைய இரட்டை தலைமையால் உள்ளடி வேலைகள், குழிபறிப்புகள்தான் குதூகலிக்கின்றன. சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வருமேயானால் வலிமையான கட்சியான மீண்டுவிடும்; அந்த நிழலிலாவது தாமரையை மலரச் செய்துவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. அதனால்தான் அதிமுகவில் கலகக் குரல் வெடித்திருக்கும் நேரத்தில் சசிகலா விடுதலை என்கிற செய்திகளும் சேர்ந்தே வருகின்றன. பாஜகவின் இந்த வியூகத்தை உணர்ந்துதானோ என்னவோ அதிமுகவின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அமளி துமளியில்லாமல் அமைதியாக முடிந்ததோ?