நம்பர் 1 நாங்கதான்.. நம்பர் 2க்குத்தான்.. அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிறாங்க.. கடம்பூர் ராஜூ
சென்னை: பாஜக திமுக இடையே இரண்டாம் இடத்திற்கு வருவதில்தான் போட்டி நிலவுவதாக கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. பாஜகவிற்கு எதிர்கட்சியாக வர ஆசை வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருக்க பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்த முனைப்பு காட்டுகிறது. திமுகவோ பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தலிலாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று இப்போதிருந்தே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நான்காண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாஜக தமிழக தலைவர் முருகனோ, அடுத்த ஆண்டு எங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் எம்எல்ஏக்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி அளித்த பேட்டியில், பாஜக தலைமையில்தான் கூட்டணி ஏற்படும் என்று கூறினார். சட்டசபை தேர்தலில் போட்டி பாஜகவிற்கும் திமுகவிற்கும்தான் ஏற்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகதான் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். இரண்டாவது இடம் யாருக்கு என்பதில்தான் திமுக, பாஜக இடையே போட்டி ஏற்படும் என்று தெரிவித்தார்.
அவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமி
அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிக இடங்களை பாஜக பெறும் பட்சத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. அப்போது திமுகவை விட அதிக இடங்களை வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதே போல வரும் சட்டசபைத் தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
திமுகவில் இப்போதே உட்கட்சி பூசல் ஆரம்பித்து விட்டது. கனிமொழியை கட்டுப்படுத்த உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வேலையை ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.