அரசியலிலிருந்து ஒதுங்கும்... சசிகலா அறிவிப்பை வரவேற்கிறேன்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன்
சென்னை: அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், அவரது முடிவை பாஜக வரவேற்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், பொது எதிரியான வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் ஒன்று கூட வேண்டும் என்று சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில். சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். அவர் சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும்.
அரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன?
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.
அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.