திமுகவை ஓரம் கட்ட பாஜக செம பிளான்.. பீகார் பாணியில் 'சர்ப்ரைஸ் வியூகம்'.. ரிசல்ட்டுக்கு வெயிட்டிங்
சென்னை: நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலின்போது, பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சி கூட்டணி வெற்றிபெற்றால், அங்கு செயல்படுத்தும், அதே ஃபார்முலாவை தமிழகத்தில் பாஜக தீவிரமாக செயல்படுத்தும் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
பிஹாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின்போது, பாஜக-நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவை மகாகத்பந்தன் என்ற பெயரில் மெகா கூட்டணி அமைத்துள்ளன.
இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்
பீகார் கட்சிகளின் கூட்டணி
கடந்த தேர்தலின்போது இடதுசாரி கட்சிகள் தனித் தனியே போட்டியிட்டன. அவர்களின் ஓட்டு சதவீதம் 1 முதல் 3 என்ற அளவுக்கு இருந்தது. இப்போது அவை ஒரே கூட்டணியில் இணைந்துள்ளன. ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்கு தொகுதிகளில் களம் காண்கின்றன. அடுத்த பக்கம் பார்த்தால், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம் 122 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தனது கோட்டாவிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சி 7 தொகுதிகளை ஜிதன்ராம் மஞ்ஜியின், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு வழங்கியுள்ளது.
பல முனை போட்டி
நிலைமை இப்படியே இருந்தால் பீகாரில் இருமுனைப் போட்டி நிலவியிருக்கும். ஆனால் இப்போது பல முனை போட்டி அங்கு காணப்படுகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் மகன், சிராஜ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு 143 தொகுதிகளில் தனித்து களம் கண்டுள்ளது. இன்னொரு பக்கம் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான இந்திய மஸ்லிஸ் இ முஸ்லிமீன் கட்சி இன்னும் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிற்கிறது.
வாக்குகள் சிதறும்
கிட்டத்தட்ட பீகாரில் தற்போது நான்கு முனை போட்டி நிலவுவதாக எடுத்துக்கொள்ளலாம். இதில் யாருக்கு ஆதாயம்? யாருக்கு நஷ்டம்? கண்டிப்பாக லாபம் ஆளும் பாஜக கூட்டணிக்குத்தான். நஷ்டம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்குத்தான். ஏனெனில் 15 வருடங்களாக தொடர்ந்து நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். அவர் கடந்த முறை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு முதல்வரானார். பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியில் தொடர்கிறார். கட்சிகள் மாறினாலும் காட்சி மாறவில்லை. நிதிஷ்குமார் தொடர்ந்து முதல்வராக இருப்பதால் இயல்பாகவே மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பு அலை வாக்குகள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நான்குமுனைப்போட்டியால், எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடும்.
பாஜக கூட்டணிக்கு ஆதாயம்
பாஜக கடந்தமுறை சட்டசபை தேர்தலின்போது, அதாவது 2015 ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு 24.4 2 சதவீதம் வாக்குகளை பெற்றது. இப்போது இந்த வாக்கு சதவீதம், நிதிஷ்குமார் கட்சிக்கும் கிடைக்கும் என்பதால் அதிர்ப்பு அலையால் இழக்கும் வாக்குகளை பாஜக ஈடுகட்டும். மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதால் தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஓட்டுக்கள் பாஸ்வான் மகன் சிராக் கட்சிக்கு செல்லும் என்றும், முஸ்லிம்கள் வாக்குகள் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான கூட்டணிக்கு செல்லும் என்றும் கணக்குப் போடுகிறது பாஜக. இந்த இரு பிரிவினரின் வாக்குகளும் வழக்கமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லக்கூடியது. இந்த முறை அந்த ஓட்டுகள் பிரிவதால் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கப் போவதில்லை.. இது நமது வெற்றியை எளிதாகும் என்று கருதுகிறது பாஜக.
சின்ன இடைவெளிதான்
இப்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் மீண்டும் நிதிஷ்குமார்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றுதான் கணிக்கிறது. இரு கூட்டணிகள் இடையேயான வாக்கு சதவீதம் என்பது இரட்டை இலக்கத்தை விட குறைவாக இருக்கிறது. இந்த சிறிய இடைவெளியில்தான் பாஜக கூட்டணி வெல்லப் போகிறது. இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒருவேளை தேஜஸ்வி யாதவ் மேஜிக் நிகழ்த்தினால், அவரின் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்க முடியும். மற்றபடி சிம்பிள் கணக்கு போட்டுப் பார்த்தாலும் பாஜக கூட்டணி தான் பீகாரில் ஆட்சி அமைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்தில் அதே பார்முலா
ஒருவேளை பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அதே பார்முலா அறிமுகம் செய்யப்படும். அதாவது தொடர்ந்து ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக மீது எழுந்துள்ள இயல்பான அதிருப்திகளின் பலனை பிரதான எதிர்கட்சியான திமுக அறுவடை செய்யாமல் பாஜக தடுக்கும். எதிர்ப்பு ஓட்டுக்களை பல பிரிவாக பிரித்து விடும் வேலையை பாஜக செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு கொம்பு சீவி விட்டால் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை விட கடுமையாக மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் கட்சிகளை எதிர்த்து பேசுவார்கள். இதனால் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி கொஞ்சம் அவர்களுக்கும் செல்லும். இது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்புக்கு கொண்டு செல்ல விடாது என்று கணக்கு போடுகிறதாம் பாஜக.
சர்ப்ரைஸ் வியூகங்கள்
ஆளும் கூட்டணிக்கு எதிராக சிதறும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லாமல் போனால், பாஜக அதிமுகவுக்குதான் ஆதாயம் கிடைக்கும் என்பதால், தங்களை எதிர்க்கும் சிறு கட்சிகளை இன்னமும் வலுப்படுத்துவதுதான் பிஹார் பாணி அரசியல் என்கிறார்கள். மத்தியில் சிராக் பாஸ்வான் பாஜக கூட்டணியில் இருந்த போதிலும் மாநிலத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். இது மிகவும் வித்தியாசமான அரசியல் பார்முலாவாக இருக்கிறது. இதேபோன்ற பல சர்ப்ரைஸ் வியூகங்களை தமிழகத்திலும் பாஜக செய்யலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக பாணி
பாஜகவில் பீகாரில் பாஜக ஏற்கனவே வலுவான கட்சியாக இருப்பதால், நிதிஷ்குமாரின் எதிர்ப்பு அலைகளை பாஜக சமாளித்துக் கொள்ளும். ஆனால், தமிழகத்தில் பாஜக வாக்குவங்கி மிக மிகக் குறைவு. எனவே, அவர்களால் பீகார் பார்முலாவை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. மேலும், தமிழகத்தில் பல கட்சிகளை வைத்து வாக்குகளை சிதற வைத்தாலும், மக்கள் எப்போதும் தெளிவாக இருப்பார்கள். எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டால் ஆட்சிக்கு வரும் என்பதில் அவர்கள் எப்போதுமே விவரமாக இருக்கிறார்கள். பிரசாரங்களை நம்பி வாக்குகளை சிதற விடாமல் இருப்பதுதான் தமிழக வாக்காளர்கள் பெரும்பாலும் கையாளும் யுக்தி. எனவே பீகார் பார்முலா தமிழகத்தில் வேலை செய்யாது என்கிறார்கள் அவர்கள். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை குறைவாக இருந்தது. எனவே மக்கள் நல கூட்டணி பிரித்த ஓட்டுக்களால் திமுக வெல்ல முடியாமல் போய் பழையபடி அதிமுக அரியணைக்கு வந்தது. அது மிகவும் அரிதான நிகழ்வு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.