கடுமையாக உழைத்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி: அமித்ஷா அட்வைஸ்
சென்னை: பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழகம் வருகை தந்த உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் பல்வேறு மாநிலங்களில் பாஜக எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது என்பது குறித்து விவரித்தார்.
குறிப்பாக திரிபுரா, பீகாரில் அதிக இடங்களில் வென்று பாஜக அதிகாரத்தை கைப்பற்றி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதேபோல் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் தெலுங்கானா, ஆந்திராவிலும் பாஜகவால் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றார் அமித்ஷா. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஆளும் அதிமுகவுடனான கூட்டணி குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தியும் தெரிவித்தனராம்.
இதற்கு பதிலளித்த அமித்ஷா, கூட்டணியை பற்றி கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும். முதலில் பாஜகவின் உள்கட்டமைப்பை நீங்க வலுப்படுத்துங்க.. பூத் அளவில் கமிட்டிகளை அமையுங்க என கூறியிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.
இந்த ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கே.டி.ராகவன், தமிழகத்தில் பாஜகவை எப்படி வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை அமித்ஷா விளக்கினார் என்றார்.