கரெக்ட்டாக காய் நகர்த்தும் பாஜக.. வேலையை காட்டும் அமித் ஷாவின் வியூகம்.. "பிக்பாஸ்" ஹாப்பியாம்!
சென்னை: தமிழகத்தில் எப்படியாவது இலையோடு சேர்த்து தாமரையை மலர வைத்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.. இதை கருத்தில் கொண்டுதான் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பில் இருந்து பக்கவாக திட்டங்களை வகுத்து பாஜக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை எப்படியாவது அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்து, ஆளும் கட்சி வரிசையில் சட்டசபையில் உட்கார்ந்து விடவேண்டும் என்று பாஜக உறுதியாக இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. கப்பு முக்கியம் பிகிலே என்று பாஜக தேசிய தலைமையும் அறிவித்துவிட்டது .
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வருவதும், முக்கியமான பாஜக தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதும் இதை கருத்தில் கொண்டுதான்.
தமிழகம்
தமிழகத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட மாஸ்டர்மைண்ட்தான் கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிடி ரவி. தேர்தல் அறிவிப்பிற்கு சில வாரங்களுக்கு முன்பாக சிடி ரவியை பாஜக தமிழக மேலிட பொறுப்பாளராக அறிவித்தது. தென்னிந்தியாவில் தேசிய தலைமை நம்பும் பாஜக தலைவர்களில் இவரும் ஒருவர். அப்போதே தமிழக பாஜக இவரின் கண்ட்ரோலுக்கு கீழ் வந்துவிட்டது.
டாஸ்க்
தமிழகத்தில் சசிகலாவை எப்படி எதிர்கொள்வது, அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்காமல் பார்த்துக் கொள்வது, திமுகவிற்கு எதிராக வலுவான உள்ளூர் கைகளை தூக்கி விடுவது, திமுகவின் பெரிய கூட்டணியை எப்படி சமாளிப்பது என்று அமித் ஷா ஒவ்வொரு விஷயத்திற்கும் தனியாக திட்டங்களை வகுத்து உள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலில் அமமுக காரணமாக பெரிய அளவில் வாக்குகள் பிரிந்தது.
சசிகலா
அதேபோல் மீண்டும் நடந்து விட கூடாது, லோக்சபா தேர்தலில் தேர்தலில் ஏற்பட்ட சறுக்கல் மீண்டும் சட்டசபை தேர்தலில் நடந்து விட கூடாது என்பதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறார். முக்கியமாக சசிகலா விவகாரத்தை பாஜக மிகவும் கவனமாகவே எதிர்கொண்டது. சசிகலா இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் அமித் ஷா இந்த விவகாரத்தில் ஒரு கண் வைத்தபடிதான் இருக்கிறார் என்கிறார்கள்.
சமாளிப்பு
தினகரனை சமாளிக்கும் வேலையையும் இன்னொரு பக்கம் அமித் ஷா முடுக்கிவிட்டு இருக்கிறார். எந்த இடத்திலும் தவறு நேர்ந்து விட கூடாது என்று அமித் ஷா தமிழக பாஜக தலைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்ல வேண்டும்.. இதற்கு அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார்.
முருகன்
பாஜக கட்சியில் கூட்டணி உட்பட முக்கிய முடிவுகளை எல். முருகன்தான் இப்போதும் எடுக்கிறார். கட்சி கட்டுப்பாடு இப்போதும் அவருக்கு கீழ்தான் இருக்கிறது. ஆனால் தேர்தல் தொடர்பான திட்டங்களை வகுப்பது, அதிமுக - பாஜக வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்களை சரி செய்வது, வெற்றியை உறுதி செய்வது என பல முக்கிய விஷயங்களை அமித் ஷாவும் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
சந்தோசம்
இதுவரை தமிழக பாஜகவின் செயல்பாடு அமித் ஷாவிற்கு குஷியை கொடுத்து இருப்பதாகவே கூறப்படுகிறது. முக்கியமாக திமுகவிற்கு எதிராக பாஜக வகுக்கும் சில பிரச்சார யுக்திகளும் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் ஒரு வகையில் பாஜக தேசிய தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.
ஆனால்
ஆனால் இதெல்லாம் அப்படியே வாக்குகளாக மாறிவிடுமா, திட்டங்கள் எல்லாம் சேர்ந்து திமுகவை வீழ்த்திவிடுமா என்று அடித்து கூறிவிட முடியாது. பாஜகத்வின் வியூகங்களை சமாளிக்க திமுகவும் அதிரடி திட்டங்களை வகுத்துதான் வருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் சீரிஸ் போல ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் மாறி மாறி திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.. இதில் யார் மேன் ஆப் தி மேட்சாக இருக்க போவது.. இல்லை அவுட்டாகி யார் பெவிலியன் செல்ல போவது என்பதை தேர்தல் முடிவே தீர்மானிக்கும்!