கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு.. மருத்துவர்கள், நர்சுகள் போராட்டம் வாபஸ்
சென்னை: நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தமிழக அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி தலைமை செவிலியராக இருந்து உயிர் நீத்த பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மருத்துவ கூட்டமைப்பு முன்வைத்தது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.
இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள், நர்சுகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நாளை ஒருநாள் அடையாளப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரையும் போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை தருவதாகும். கூட்டமைப்பினரை அழைத்து உடனடியாக அரசு பேசவேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் நர்சுகள் கூட்டமைப்பு கூட்டாக இரவு அறிவிப்பு வெளியிட்டது.
சென்னை கொரோனா நிலவரம்.. மிக மிக அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.. ஸ்டாலின் அறிக்கை
கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பணிக்காலத்தில் உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும், செவிலியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.