சென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்
சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த மழை ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: கருமேகங்கள் சூழ்ந்து சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசி மழையாக இருக்கும் என்றும் பல பகுதிகளில் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை அக்டோபர் வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தது போல சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. நகர்பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது, எழும்பூர், ராயபுரம், தி. நகர்,மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த மழை ஒரு மணிநேரம் வரை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.