மதனுக்கு கொடுத்த விருதை திரும்ப பெற்ற பிளாக் ஷீப்!.. கொடுத்ததற்கு வருந்திய நடிகர் விக்னேஷ் காந்த்!
சென்னை: யூடியூபர் மதனுக்கு அளிக்கப்பட்ட விருதை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. மேலும் பெண்களிடமும் சிறுமிகளிடமும் மதன் இப்படியெல்லாம் பேசியுள்ளார் என்பது விருது வழங்கும் போது தங்களுக்கு தெரியாது என பிளாக் ஷீப் நிர்வாகி நடிகர் விக்னேஷ் காந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பப்ஜி விளையாட்டை எப்படி விளையாடுவது என கற்றுக் கொடுக்க யூடியூப் சேனலை ஆரம்பித்தவர் சேலம் மதன். இவர் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனலின் நிர்வாகி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர்.
தம்பிகள்
தனது ரசிகர்கள், தம்பிகள் என சொந்தம் கொண்டாடிய நபர்களிடம் இருந்து ஏழைகளின் படிப்புக்காகவும் மருத்துவம் பார்க்கவும் லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து அதில் சொற்ப தொகையை கொடுத்துவிட்டு மிச்ச பணத்தை ஏப்பம் விட்டுள்ளார் மதன். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் எம்எல்ஏவின் மகன் ஒருவர் ரூ 20 லட்சத்தை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
மதன்
தன் முகத்தையே காட்டாத மதன் யூடியூப் புரொபைல் இமேஜிலும் இன்ஸ்டாகிராமிலும் சிறு வயது படத்தை போட்டோஷாப் செய்து வைத்துக் கொண்டு இளம் பெண்களையும் சிறுமிகளையும் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட வைத்துள்ளது தெரியவந்தது. இவருக்கு அண்மையில் பிளாக் ஷிப் எனும் மற்றொரு யூடியூப் சேனல் விருது வழங்கியது.
நடிகர்
அந்த விருது வழங்கும் விழாவிற்கு நடிகர் விக்னேஷ் காந்த் அழைத்த போது நிச்சயம் வருவதாக மதன் சொல்லியுள்ளார். ஆனால் அவர் வராமல் அவரது நண்பர்கள் பட்டாளத்தை அனுப்பிவைத்துள்ளார். நிகழ்ச்சியில் மதன் வரவில்லையா என கேட்ட போது கூட்டத்தில் இருந்தாலும் இருப்பார், சொல்ல முடியாது என பில்டப் செய்தனர்.
திரும்ப பெறப்பட்ட விருது
இந்த நிலையில் மதனின் லட்சணம் தெரிந்தவுடன் அவருக்கு கொடுத்த விருதை பிளாக் ஷீப் திரும்ப பெற்றுக் கொண்டது. இதுகுறித்து விக்னேஷ் காந்த் கூறுகையில் நாங்கள் விருது வழங்கும் நேரத்தில் மதன் இப்படியெல்லாம் ஆபாசமாக பேசியிருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார்.