சென்னையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியவரை தீவிரமாக தேடும் போலீஸ்
Recommended Video
சென்னை: சர்வதேச நாடுகளை உலுக்கியுள்ள இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தந்த ரணம் இன்னும் ஆறாத நிலையில், சென்னையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல் கட்டுபாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் என்னுடைய பங்கும் உள்ளது என கூறி அதிர்ச்சியளித்தார். மேலும் பேசிய அவர் இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன், முடிந்தால் என்னை கண்டுபிடியுங்கள்.
இலங்கையில் குண்டுகள் வெடித்ததை போலவே தலைநகர் சென்னையிலும் குண்டுகள் வெடிக்கும் என கூறி அதிர வைத்துள்ளார். கோயம்பேடு அருகேயுள்ள மேட்டுக்குப்பம் என்ற பகுதியிலும், தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்த மர்மநபரால் அதிர்ச்சி ஏற்பட்டது.
இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்?
இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர்.
சென்னை ஆழ்வார்திருநகரில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததையும், அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவரை தீவிரமாக தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்
கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்தது. தீவிர விசாரணை நடத்திய போலீஸார் விளையாட்டாக மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு சிறுவனை எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது