சத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவின் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதசாஹூ. இவர் தலைமையில்தான் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இவரது அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் எழுதியுள்ள மர்மநபர், சாஹூ அலுவலகத்தில் நிச்சயம் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் அலுவலகத்தில் முதல் தளத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது
அங்கு வருவோர் போவோரை கண்காணித்து சோதனை நடத்தினர். இதையடுத்து கடிதத்தை பெற்றுக் கொண்ட போலீஸார் அக்கடிதம் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.