ஓஎம்ஆர் சாலையில் ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அச்சத்தில் ஊழியர்கள்
சென்னை: சென்னையை அடுத்த கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அங்குள்ள செக்யூரிட்டி அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
உடனடியாக ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த நிறுவனத்தின் 13 மாடிகளையும் சோதனையிட்டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. வீட்டுக் காவலில் வைப்பு.. ஆந்திரத்தில் பரபரப்பு
இன்று இந்த நிறுவனத்தில் கான்பிரன்ஸ் ஒன்று நடக்க உள்ளது. இதனால் தொழில் போட்டி காரணமாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போனில் தொடர்பு கொண்ட மர்மநபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.