இந்தியில் பேசிய மர்ம நபர்.. அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை!
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தேனப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் தமிழகம் முழுக்க பிரபலம். கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் தொடங்கி திமுக தொடர்பான முக்கிய அலுவலகங்கள் அங்குதான் அமைந்துள்ளது. அங்கு எப்போதும் திமுக தொண்டர்கள் அதிக அளவில் இருப்பார்கள்.
இந்த நிலையில்தான் சில மணி நேரங்களுக்கு முன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து திமுக அலுவலகத்தில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிந்தனர். இதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது. அங்கு இருக்கும் மக்கள் ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.