பால் குடுக்கல.. முகத்தை கூட பாக்கல.. பாத்திரத்தில் மூடி குழந்தையை கொன்றோம்.. இளந்தாய் பகீர்
பிறந்த குழந்தையை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சிறைக்குள் அபிராமி களி தின்று கொண்டும், கதறி அழுது கொண்டும் இருப்பதை நாள்தோறும் கேள்விப்பட்டாலும் காமம் கண்ணை மறைத்துள்ள சில பெண்களுக்கு இது இன்னமும் மண்டையில் ஏறவில்லை. அதனால்தான் உலகமே தெரியாத பிஞ்சுகளை கொல்லும் உச்சக்கட்ட பயங்கரம் இன்னமும் அடங்காமல் உள்ளது.
வேளச்சேரி கன்னிகாபுரத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் 4 தினங்களுக்கு முன்பு பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வசந்தியின் குழந்தை
இதுகுறித்து கிண்டி போலீசார் விரைந்து சென்று குழந்தையை பார்த்தனர். அப்போது குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். குப்பை தொட்டி இருந்த பகுதிகளில் மக்களை விசாரிக்க தொடங்கினர். அப்போது ஒருசிலர், அந்த பகுதியில் வசித்து வரும் வசந்தி என்ற பெண்ணுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது, ஆனால் அந்த குழந்தையை வீட்டில் இப்போது காணோம் என்றனர். இதனால் அதிர்ந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி சென்றனர்.
கலைத்துவிடு
அப்போதுதான் ஒவ்வொரு விஷயமாக வெளியே வந்தது. வசந்தி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கும் அங்கு வேலை பார்க்கும் ஜெபராஜ் என்பவருக்கும் காதல் இருந்திருக்கிறது. அந்த காதல் எல்லை மீறி, கடைசியில் கர்ப்பத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட அந்த இளைஞர், "நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.ஆனால் இந்த குழந்தை வேணாம், கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தை இருந்தால் நமக்குதான் அவமானம், அதனால் கலைத்துவிடு" என்று சொல்லி இருக்கிறார்.
வயிறு பெரிதானது
இதற்கு ஒப்புக் கொண்ட வசந்தியும் குழந்தையை கலைக்க ஆஸ்பத்திரி போனார். ஆனால் கர்ப்பத்தை கலைத்துவிட்டால் வசந்தி உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் வசந்தி 7 மாதம் வரை வீட்டுக்கு தெரியாமல் இதை மறைத்தார். ஆனால் வசந்தி வயிறு பெரிதாக, ஆக, அவரது தாயார் விஜயா இதை கண்டுபிடித்து விட்டார்.
பாத்திரத்தில் குழந்தை
இதனால் மகளை கண்டித்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் குழந்தை பிறக்கும்வரை 3 பேருமே காத்திருந்தனர்... பிரசவ காலமும் நெருங்கியது... குழந்தையும் பிறந்தது... உடனே வசந்தியின் தாயார் விஜயா, பிறந்த குழந்தை அழுதுவிடக்கூடாது, அப்படி அழுதால் வெளியே சத்தம் கேட்டுவிடும் என்பதற்காகவும் பிறந்தவுடனேயே அந்த பச்சிளம் குழந்தையை தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி விட்டார்.
கழுத்தை நெறித்தனர்
குழந்தை பாத்திரத்திற்குள் மூச்சுவிட முடியாமல் திணறி திணறி இறந்துள்ளது. குழந்தை இறந்தது தெரிந்ததும், வசந்தியின் மனம் ஆறவில்லை. பாத்திரத்திலிருந்து குழந்தையை வெளியே எடுத்து கழுத்தை நெறித்து கொன்றார். பிறகு குப்பை தொட்டியில் கொண்டுபோய் குழந்தையை வீசிவிட்டு வந்தார். இந்த விவரங்கள் அனைத்தையும் போலீசாரிடம் கைதான 3 பேரும் தெரிவித்தனர். அத்துடன், பிறந்த குழந்தைக்கு பால்கூட தான் கொடுக்கவில்லை, முகத்தைகூட சரியா பார்க்கவில்லை.. என்று வசந்தி போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.