இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாதுப்பா.. டெலிகேட் பொஷிஷனில் ஸ்டாலின், எடப்பாடி
Recommended Video
சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை அதிமுக மட்டுமின்றி, திமுகவும் ஏற்க மறுத்துள்ளது. இரு கட்சி தலைவர்களுமே, எக்ஸிட் போலை நம்பவில்லை என சொல்லி வைத்தது மாதிரி சொல்லியுள்ளார்கள்.
பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரசை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றுதான் சொல்லியுள்ளன. ஆனாலும், இதை பொருட்படுத்தவில்லை என்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இன்று அவர் அளித்த பேட்டியில், எங்கள் தலைவர் கருணாநிதி, கற்றுத்தந்துள்ள பாடத்தின்படி, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளைத்தான் நம்புவோமே தவிர, எக்ஸிட் போல்களை நம்ப மாட்டோம் என கூறியுள்ளார் அவர்.
அப்படியா?.. எனக்கு தெரியாதே?.. உங்களுக்கு யார் சொன்னது?.. செய்தியாளர்களை கேள்வி கேட்ட ஸ்டாலின்!
என்ன காரணம்
எக்ஸிட் போல் ரிசல்ட் தங்களுக்கு சாதகமாக வந்தும்கூட ஸ்டாலின், அட்டாக்கிங் ஷாட் ஆடாமல் டிஃபென்ஸ் ஆடிக் கொண்டிருப்பதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, அகில இந்திய அளவில் பாஜக கூட்டணிதான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று கூறிய அதே கருத்துக் கணிப்பு நிறுவனங்கள்தான், தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெறும் என்றும் சொல்கின்றன. எனவே, தமிழக கள நிலவரம் பற்றிய சர்வேயை ஏற்பதாக சொன்னால், அகில இந்திய அளவிலான சர்வேயையும் ஏற்பதாகவே அர்த்தமாகும். இது காங்கிரசை காயப்படுத்தும். எனவே, குதூகலத்தை கூட வெளியே சொல்ல முடியாத டெலிகேட் பொஷிஷனில் ஸ்டாலின் இருப்பதாக சொல்கிறார்கள்.
பிரதமர் வேட்பாளர்
ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று முன்மொழிந்து அறிவித்தவர் ஸ்டாலின்தான். இப்போது தனது ஆசை நிறைவேறாது என்று சொல்லும் எக்ஸிட் போல்களை அவர் எப்படி சிலாகிக்க முடியும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
எடப்பாடியும் ஏற்கவில்லை
மற்றொரு பக்கம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியிலும், இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என கூறியுள்ளார். தாங்கள் இடம் பிடித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணிதான் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போகிறது என கருத்துக் கணிப்புகள் கூறினாலும், அதை திணிப்பு என கூறும் நிலைக்கு இவர் வர காரணம், அந்த கணிப்புகள் எல்லாமே அதிமுக இரட்டை இலக்க தொகுதிகளை கூட தொட முடியாது என ஆரூடம் கூறியுள்ளதுதான். அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும் நிலையில் இருக்கும்போது, பாஜக வெற்றியை பற்றி எடப்பாடி எப்படி ஆனந்தப்பட முடியும்? என கேட்கிறார்கள் அதிமுகவினர். நியாயம்தானே!
இப்படி ஒரு நிலைமையா
ஆக மொத்தம், குளிர் காய்ச்சல் நேரத்தில் பிரியாணியை பார்த்தது போல, உள்ளது அதிமுக, திமுக தலைவர்கள் நிலைமை. ஒன்று மாநிலத்தில் அடி வாங்குகிறது, அல்லது மத்தியில் அடி வாங்குகிறது. இதில் எதைத்தான் அவர்கள் கொண்டாட முடியும். பாவம்தான் தமிழக இரு பெரும் கட்சித் தலைவர்களின் நிலைமையும்.