கள்ளக்குறிச்சி எனக்குத்தான்.. இல்லை எனக்குத்தான்.. முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக
Recommended Video
சென்னை: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியை பாமகவும் தேமுதிகவும் கேட்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அப்போது நள்ளிரவைக் கடந்தும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடந்துள்ளது.
ஆனால் இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாமகவும் கேட்பதால் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?
சுதீஷ் விருப்பம்
விஜயகாந்த் 2ஆவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற தொகுதி ரிஷிவந்தியம். இது விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும். எனவே ராசியான தொகுதியான இங்கு மைத்துனர் சுதீஷ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
கைவிரித்து விட்டது
இந்த தொகுதியை தேமுதிக கேட்டநிலையில் பாமகவும் இதை கேட்டுள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஏற்கெனவே கூட்டணிக்குள் வர இழுபறி நீடித்து வந்த நிலையில் தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்து விட்டால் என்ன செய்வது என அதிமுக குழப்பத்தில் உள்ளது. இதையடுத்து தேமுதிகவும் பாமகவும் பேசி சமரசம் செய்து கொள்ளுமாறு அதிமுக கைவிரித்து விட்டது.
தேமுதிக கெத்து
இந்த நிலையில் கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக, ஏற்கெனவே செல்வாக்கு லேசாக சரிந்த நிலையில் தற்போது வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதியையும் விட்டு கொடுப்பதா, அது எப்படி என்ற மனநிலையில் உள்ளது.
எல்லாம் கணக்கு
7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று காட்டுங்கள். உங்களுக்கு 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என பாமகவிடம் மோடி வாக்குறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாமக தொகுதிகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் வன்னியர் ஓட்டுகள் நிறைய இருப்பதால் அந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என பாமக கருதுகிறது. அது போல் தருமபுரி தொகுதிக்கு அன்புமணி ஏராளமான திட்டங்களை கொண்டு சென்றதால் அதன் தாக்கம் கிருஷ்ணகிரியில் இருக்கும் என்பதால் அந்த தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
வீட்டுக்குச் சென்ற ராமதாஸ்
எனவே தேமுதிகவை விமர்சித்திருந்தாலும் பரவாயில்லை என அத்தனையையும் மறந்து விஜயகாந்த் வீட்டில் இன்று கால் எடுத்து வைத்திருக்கிறார் ராமதாஸ். அங்கு கிளாஷ் ஆகும் தொகுதிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தேமுதிகவின் முடிவு என்ன என்பது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். அஷ்டமி, நவமி வருவதால் எப்படியும் தொகுதி பங்கீட்டை அதிமுக அந்த திதிகளுக்கு பிறகுதான் வெளியிடும் என்பதால் தேமுதிகவுக்கு யோசிக்க நேரம் இருக்கிறது.