போட்ஸ்வானா மர்மம்.. வட்டமாக சுற்றி குப்புற விழுந்து சாகும் யானைகள்! பேரழிவு.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி
சென்னை: கடந்த இரண்டு மாதங்களில் வடக்கு போட்ஸ்வானாவில் (Botswana) 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதை உயிரியல் விஞ்ஞானிகள் "பாதுகாப்பு பேரழிவு" என்று வர்ணிக்கிறார்கள்.
போட்ஸ்வானா மக்கள், இந்த இழப்பை தேசிய சுற்றுலா பொருளாதாரத்திற்கு ஒரு அடியாகவும், சமூகத்திற்கு ஒரு இழப்பாகவும் கருதுகின்றனர்.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா உலகிலேயே அதிகம் யானைகள் உள்ள நாடு. 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேல் இங்கு யானைகள் உள்ளன.
நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை... கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டது -மு.க.ஸ்டாலின்
350 யானைகள்
இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேட்டையில்லை
யானைகள் எப்படி உயிரிழந்துள்ளன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. ஆனால் உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை என்பதால், இவை வேட்டையாடப்படவில்லை என்று உறுதியாக தெரிகிறது. பெரும்பாலான யானைகள் தலையை நிலத்தை நோக்கி பார்த்தபடி பலியாகியுள்ளதை புகைப்பட ஆதாரங்கள் விளக்குகின்றன.
என்ன காரணம்
மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கு பரவி இருக்கலாமோ, அதனால் யானைகள் உயிரிழந்திருக்கலாமோ எனவும் பலர் கருதுகின்றனர். ஆனால், நரம்பியல் தொடர்பான நோய் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சுற்றி வந்து விழும் யானைகள்
ஏனெனில், வானிலிருந்து வீடியோ மூலமாக யானைகளின் நிகழ்வுகளை படம் பிடித்தபோது ஒரு திடுக்கிடும் உண்மை வெளியானது. சில யானைகள் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்ததாகவும், பிறகு, அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏன் அவரை அப்படி தங்கள் பாதையை மாற்ற முடியாமல் ஒரே இடத்தை சுற்றி வந்து விழுந்து பலியாகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. நரம்பியல் நோய் பாதிப்பு இருந்தால்தான் இதுபோன்று நடக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
Recommended Video
ஆய்வு
இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைகாக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போட்ஸ்வானா வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் டாக்டர்.சைரில் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவுகள் வெளியாக சில வாரங்கள் ஆகும். அப்போதுதான் மர்ம முடிச்சு அவிழும்.
|
தமிழகத்திலும் யானைகள் பலி
2007 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்து 1 லட்சத்து 44 ஆயிரமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கோவையில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கப்படவில்லை. மேட்டுப்பாளையம் சிறுமுகை காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.