சென்னை ஏர்போர்ட்டில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டமார் டமார்.. இது 83வது முறை!
சென்னை ஏர்போர்ட்டில் 83-வது தடவையாக கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நேரத்தில் 4 கண்ணாடிகள் அடுத்தடுத்து டம் டம்மென்று உடைந்து நொறுங்கியதால், பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.
விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடிகள், மேற்கூரைகள் விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இப்படியே 6 வருஷம் ஓடிவிட்டது. ஆனாலும் இதற்கு ஒரு முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பயணிகள், வழியனுப்ப வந்தவர்கள் என கிட்டத்தட்ட 16 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.
இதுவரை 82 முறை சுவர் கண்ணாடிகள், தானியங்கி கதவு கண்ணாடிகள், என உடைந்து நொறுங்கி வருகின்றன. இப்போது நொறுங்கியது 83-வது முறையாகும். 3-வது நுழைவு வாயில் மேல் பகுதியில் உள்ள 4 கண்ணாடிகளும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக உடைந்து விழுந்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி ஓடினார்கள்.
உடைந்த கண்ணாடிகள் 8 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் அங்கிருந்த எல்லோரும் பதட்டமாகி விட்டார்கள. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.