தமிழக சட்டசபை தேர்தல்.. 55 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12-ந் தேதி தொடங்குகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரமும் செய்து வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் 55 வேட்பாளர்களை அக்கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் அறிவித்துள்ளார். மொத்தம் 15 மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது.