ஏற்கனவே திமுகவில் அதிமுக தலைகள் அதிகம்.. இதில் பாஜகவும் இணைய போகுதா.. குழப்பத்தில் தொண்டர்கள்
அரசகுமார், பாஜகவில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: எம்ஜிஆருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு அரசகுமார் சொன்ன உடனேயே எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டுள்ளது. கூடிய சீக்கிரம் திமுகவின் அடையாளம் தொலைந்து போகுமா... சுத்தமான திமுக என்று யாரும் சொல்லாத நிலையும் ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
மாற்று கட்சியில் இணைவது என்பது சர்வ சாதாரணமான நிகழ்வுதான்... ஆனால் யார், எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு தாவுகிறார்கள் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதற்கு பிறகுதான், அதற்கான பின்னணியையும் ஆராய வேண்டி உள்ளது.
திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு வீட்டு கல்யாணத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் பிடி அரசகுமார், "முதல்வர் பதவியை தட்டி பறிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்திருந்தால் ஒரே நைட்டில் கூவத்தூர் சென்று அதை முடித்து முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், ஜனநாயக ரீதியாக ஆட்சியதிகாரம் கிடைப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.
ஸ்டாலினை புகழ்வதா? அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தது பாஜக
தூண்டில்
இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல.. அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்சியின் மாநில துணை தலைவரே இப்படி சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்? என்று பல அர்த்தங்கள் அதற்கு கற்பிக்கப்பட்டன. ஒருவேளை பாஜக, திமுகவுக்கு தூண்டில் போடுகிறதா என்ற சந்தேகத்தையும் அது எழுப்பியது.
ஏன் இப்படி?
ஆனால், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் தனது பேஸ்புக் பதிவில் கொதித்து போய் இதற்கு கண்டனம் சொல்லவும்தான், இதில் பாஜகவின் பிளான் எதுவும் இல்லை என விஷயம் கிளியர் ஆனது. அப்படியானால், அரசகுமார் ஏன் இப்படி பேச வேண்டும் என்ற கேள்வியும் உடனே எழுந்துள்ளது.
விளக்கம்
"நான் ஒன்றும் திட்டமிட்டு பேசவில்லை. ஏதோ யதார்த்தமாகத்தான் சொன்னேன், 12 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கல்யாணத்தில் ஸ்டாலினை பார்த்து ரொம்ப அழகாக இருக்கீங்கன்னு சொன்னேன்.. இப்போ பார்க்கும்போதும், அழகு குறையாமல் இருக்கீங்களேன்னு சொன்னேன்.. அதுக்காக எம்ஜிஆருடன் ஒப்பிட்டு சொன்னேன்" என்றுஅரசகுமார் பெயரளவுக்கு ஒரு விளக்கம் தந்தாலும் விஷயமே வேறு என்கிறார்கள்.
ஸ்டாலின்
பாஜகவில் அரசகுமாருக்கு முன்புபோல் செல்வாக்கு இல்லையாம்.. எப்படியும் உரிய மரியாதை தருவார்கள் என்று காத்து கிடந்தவருக்கு கடைசி வரை அது கிடைக்காமல் போனதால் விரக்தியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் வேறு கட்சியில் சேரலாமா, விட்டதை பிடிக்கலாமா என்று யோசித்து வருகிறாராம். அதற்கான முதல் புள்ளிதான் ஸ்டாலினுக்கு வைத்த ஐஸ் என்கிறார்கள். ஒருவேளை எதிர்பார்த்தது எதுவும் திமுகவில் கிடைக்காவிட்டால், அதிமுக பக்கம் கூட இவர் தாவ தயாராக இருக்கிறார் என்ற விஷயமும் கசிகிறது.
அமைச்சர் தொகுதி
இவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்... ஏற்கனவே திமுகவின் மூத்த தலைகள் புதுக்கோட்டையை இறுகப்பற்றி உள்ளனர்.. அதிமுகவிலும் அமைச்சரின் தொகுதியாகவே புதுக்கோட்டை உள்ளதால்.. எதிர்பார்க்கும் பொறுப்பை திமுக, அதிமுக கட்சிகள் இவருக்கு தருமா என்பது சந்தேகமே!
அதிருப்தி
ஒருவேளை இவர் திமுகவில் இணைவதாகவே எடுத்து கொண்டாலும், இவரை போலவே அதிருப்தியில் உள்ள பாஜகவினர் திமுகவில் இணைய முன்வருவார்களா என தெரியவில்லை. அப்படி மாற்று கட்சியில் இருந்து திமுகவுக்கு ஒவ்வொருவராக வர தொடங்கிவிட்டால், திமுகவின் அடையாளம் தொலைந்து போகுமா அல்லது, மாற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இப்படி திமுகவுக்குள் ஐக்கியமானால், அது திமுகவுக்கு பலம் என்று எடுத்து கொள்வதா? பலவீனம் என்று சொல்வதா?
திமுக அடையாளம்
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல பேர் திமுகவில் உள்ளனர். அவர்கள்தான் முக்கியப் பொறுப்புகளிலும் உள்ளனர். இதனால் ஆரம்ப காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வரும் சீனியர்கள் பலர் முக்கியப் பொறுப்புகள் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பாஜகவும் இந்த வருகை பட்டியலில் இணைந்தால் அது திமுகவின் அடையாளத்தை மேலும் மாற்றும் என்றே தெரிகிறது.