தனி சாட்டிலைட் டிவி.. நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு நிச்சயம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் தான்
சென்னை: புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்தியாவில் தொழில் தொடங்குவோரை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதலுக்காகவும் பிரத்யேகமாக சாட்டிலைட் சேனல் துவக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இந்த சேனலில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
இந்த சேனலில் புதிய தொழில் துவங்குவதற்கான ஆலோசனைகள், வெற்றிகரமான தொழில் நடத்திபவருவர்களின் அனுபவம், அரசு எந்ததெந்த தொழிலுக்கு என்ன வரி விதிக்கிறது. தொழில் தொடங்குவதற்கு என்ன மாதிரியான அனுமதிகள் பெற வேண்டும். அதை எப்படி பெற வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு அரசு அளிக்கும் மானியங்கள், கடன்கள் உள்ளிட்டவைகள் குறித்த தகவலும் இடம் பெறும் என தெரிகிறது.
இந்த சேனலை பார்த்து பலரும் தொழில் தொடங்க முன்வருவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது. இதன் மூலம் நிறையபேருக்கு வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும் உருவாகும் என மத்திய அரக கணக்கு போட்டுதான் இந்த சேனலை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது.
இன்றைய இளைஞர்களை வேலைகளை நோக்கி செல்லாமல் வேலைகளை உருவாக்க வைக்க வேண்டும் என்பதற்கான திட்டமாக இது பார்க்கப்படுகிறது. என்ன வகையான தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்கான வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இந்த புதிய சேனல் இருந்தால் நிச்சயம் இந்த திட்டம் வரப்பிரசாதம் தான்.