தமிழக பட்ஜெட் ஆக.13-ல் தாக்கல்- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மே 7-ந் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜூன் 21-ந் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றனர்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம்.. ராமதாஸ் கோரிக்கையை உடனே ஏற்ற தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி
வேளாண் பட்ஜெட்
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் முந்தைய அதிமுக அரசு தனது இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்ரவரியில் தாக்கல் செய்தது. மேலும் தமிழக நிதி நிலவரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்; பொது பட்ஜெட் தனியாகவும் வேளாண்துறைக்கான பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முதல் முறையாக இ பட்ஜெட்
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் அவர் நடத்தி இருந்தார். தமிழக பட்ஜெட் பேப்பரில் இல்லாமல் இ பட்ஜெட்டாக தயாரிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆகையால் புதிய அறிவிப்புகள், சலுகைகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆக. 13-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடனும் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழக பட்ஜெட் வரும் 13-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13-ந் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்படும். சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் தேதி இறுதி செயப்பட்டது.
என்ன என்ன ஆலோசனைகள்?
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை முந்தைய அதிமுக அரசு 60 ஆக உயர்த்தியது. இதனால் ஏற்பட்டிருக்கும் சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.