மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு கரிசனமாக இனிப்பு, ஏழைகளுக்கு கசப்பு.. ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில், வெறும் அலங்கார வார்த்தைகளும் அறிவிப்புகளுமே உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அலங்கார அணிவகுப்பு
மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கம் போல் "அலங்கார வார்த்தைகளும்", "அறிவிப்புகளும்" நிறைந்த அணிவகுப்பாகக் காட்சியளிக்கிறதே தவிர, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் வகையில், மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை. இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்
சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என்பன அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்பதில்தான் முடியும். 50 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய போக்குவரத்தை தட்டிப் பறித்து, செல்வந்தர்களுக்குத் தாரை வார்ப்பதைப் போல் உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் மூடுவிழா
பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்துள்ள 51% பங்கையும் கூட, குறைத்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவை அறிவித்து, பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாஜக. ஆட்சியில் முழுவதுமாக மூடு விழா நடத்திவிடுவார்கள் போல. 2019-20- நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்டிட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு மத்திய அரசு நிற்பது பெரும் கவலையளிக்கிறது.
தமிழக குடிநீர் பிரச்சனைக்கு திட்டம் இல்லை
தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக கோதாவரி-கிருஷ்ணா- காவேரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு- தமிழக அரசு கோரிக்கை விடுத்த 1,000 கோடி ரூபாய் நிதியைக் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கவில்லை.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியில்லை
தனி நபரின் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாத பா.ஜ.க. அரசு, தங்களுக்காகத் தேர்தலில் பாடுபட்டு, வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்த கார்ப்பரேட்டுகளுக்குக் கரிசனத்துடன் 400 கோடி ரூபாய் வரை "டேர்ன் ஓவர்" உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் வரிச்சலுகையை நீட்டித்து, 99% கார்ப்பரேட் கம்பெனிகள் வரிச்சலுகை பெறும் வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஏழைகளுக்கு கசப்பு கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு
ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்விநியோகம், ஒரே கல்விமுறை என்று மாநில அரசுகளைச் சிறிதும் சட்டை செய்யாத, மாநில உரிமைகளை மதிக்காத, அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது. இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களைக் கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது என சாடியுள்ளார்.அதே போல பத்திரிகை காகித இறக்குமதிக்கு புதிதாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பது அச்சு ஊடகங்களை அடியோடு முடக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்