கச்சிதமான பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு.. ஒரே நாளில் மாஸ் காட்டிய மோடி
பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து, மோடியின் மீது நல்லெண்ணம் விழ தொடங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: கச்சிதமான ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு... ஒரே நாளில் மாஸ் காட்டி விட்டார் பிரதமர் மோடி!
விவசாயிகள், நடுத்தர மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலருக்கு பல கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தாலும் எல்லாம் நடைமுறை சாத்தியமா என்பது கேள்விகளாக முன் வருகின்றன. அள்ளி வீசிய பட்ஜெட்டுக்கு பஞ்சமில்லை என்றாலும் ஆனால் நிறைய பிளஸ்களை அள்ளிவிட்டார் மோடி என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலாவதாக, 5 மாநில சரிவை ஈடுகட்டவே இந்த பட்ஜெட் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது என்றாலும், தோற்ற மாநிலங்களில் பாஜக மீதான கோபம் தணிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நிர்பந்தங்கள்
இரண்டாவதாக, வாக்காளர்களை தங்கள் பக்கம் திருப்பவே இந்த பட்ஜெட் என்பது அப்பட்டமாக தெரிந்தாலும், சில அறிவிப்புகளை வரவேற்கும்படியும், ஏன் எதிர்க்கட்சிகளே கேள்வி கேட்கவும், மறுக்கவும் முடியாத ஒரு நிர்ப்பந்தத்திலும் கொண்டு வந்துவிட்டு விட்டார் மோடி.
எதிர்மறை விமர்சனங்கள்
மூன்றாவதாக, இன்னும் 5 மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், இப்படி ஒரு சலுகைகள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வது தார்மீக ரீதியாக தவறு என்றாலும் அதை மறுக்கவோ, அல்லது நடுத்தர மக்களுக்கு கிடைத்துள்ள சலுகைகளை குறை சொல்லவோ முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகளை திணறடித்து விட்டார் மோடி. மீறி எதிர்க்கட்சிகள் இதுசம்பந்தமாக வாய் திறந்தாலும், பொதுமக்களிடம் எதிர்மறை விமர்சனங்களைத்தான் பெற வேண்டி வரும். அந்த விதத்தில் மோடி எதிர்க்கட்சிகளின் வாயை அடக்கி விட்டார்.
முதிர்ச்சியான பட்ஜெட்
அடுத்ததாக, ஒரு நாள் நிதியமைச்சராக மாறி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பியூஸ் கோயல்தான். ரொம்ப கம்மி நாளில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்இது என்று சொன்னாலும், இதற்கு முந்தைய பட்ஜெட்களை விடவும் இந்த பட்ஜெட்டில் முதிர்ச்சி தெரிகிறது. அதை விட கோயல் நேற்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கோஷங்களை வெகு அழகாக சமாளித்தார்.
பியூஷ் கோயல்
பியூஷ் கோயலை ஆரம்பத்திலிருந்தே அதாவது அருண்ஜெட்லிக்கு பதிலாக நிதியமைச்சராக பதவி தந்திருந்தால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி மோடி அரசு மீது வந்திருக்காது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு பக்காவாக அறிவிப்புகள் இருந்தன. குறிப்பாக, ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை சொல்லியே ஆக வேண்டும். 3 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எல்லையை பாதுகாக்க எவ்வளவு வேண்டுமானாலும் ஒதுக்க தயார் என்ற அறிவிப்பை யார்தான் குறை சொல்ல முடியும்?
பிளஸ் பாயிண்ட்தான்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் போதுமா? உள்ளிட்ட எத்தனையோ குறைகள் நேற்றைய பட்ஜெட்டில் தென்பட்டாலும், இது பட்ஜெட் அல்ல, வெறும் இடைக்கால பட்ஜெட்தான் என்று சொல்லப்பட்டாலும்... மீண்டும் ஆட்சியை பாஜக பிடித்துவிடுமோ என்ற சந்தேகத்தை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த இடைக்கால பட்ஜெட் மோடிக்கு பிளஸ் பாயிண்ட்தான்!
திடீர் அஸ்திரங்கள்
போற போக்கைப் பார்த்தால் இன்னும் சில பல அதிரடிகளைச் செய்து விட்டு தேர்தலைச் சந்திக்கவும் பாஜக தயங்காது என்றும் எண்ணத் தோன்றுகிறது. காங்கிரஸ் கூட்டணிகள் அமைப்பதோடு, பாஜகவின் இந்த திடீர் அஸ்திரங்களையும் சமாளிக்கும் வகையில் தயாராக வேண்டிய நிர்ப்பந்தமும் கூடவே வந்து சேர்ந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.