வருகிறது புரேவி.. ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.. மேலும் வலுவடையும்.. எங்கு நோக்கி நகரும்?
புரேவி புயல் காரணமாக எங்கெங்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்து இலங்கை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு என்றும், எந்தெந்த மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் முழுவதும் நிவர் புயல் நம்மை மிரட்டி கொண்டிருந்தது.. வங்கக் கடலில் இந்த புயல் உருவாகி புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்துவிட்டாலும், வட மாவட்டங்களுக்கு பலத்த மழைப்பொழிவை தந்தது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கும் மழையை தந்தது.
இந்நிலையில் இன்று உருவாகும் புதிய புயலான புரேவியும் அதே போன்ற மழையை தென் தமிழகத்திற்கு தரும் என்று வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இன்று வங்க கடலில் உருவாகும் இந்த புரேவி, நாளை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ள உள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த இந்த புயல், இன்று அதாவது டிசம்பர் 1-ம் தேதி காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்றும் நாளை 2-ம் தேதி சாயங்காலம், இந்த புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
புரேவி புயல்: தென் தமிழக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்- கரைகள், அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
அப்படியென்றால், குமரி கடல் பகுதியில் மட்டும் 2 நாட்கள் இந்த புயல் நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாகவே புயலால் தென் தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அதேபோல, கேரளாவிலும் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. குமரியில் இருந்து கரையைக் கடந்து கேரளா செல்ல உள்ளதால், அங்கும் கனமழை பெய்ய உள்ளது.. தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கேரளாவிலும் புரேவி புயல் காரணமாக பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.