அடடே.. இரு முறை கரையை கடக்கும் புரேவி புயல்.. ஏன் இப்படி? என்ன காரணம்?
சென்னை: பெரும்பாலும் புயல்கள் ஒரு கடற்கரையில் கரையை கடக்கும், ஆனால், இருமுறை கரையை கடக்கிறது புரேவிப் புயல். இது ஏன் நடக்கிறது? பார்ப்போம் வாருங்கள்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரேவி, புயல், 4ம் தேதி காலை, பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் போது, 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சமயங்களில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
இருமுறை கரையை கடக்கும் புரேவி
பொதுவாக புயல் கரையை கடந்ததும் வலுவிழந்துவிடும். ஆனால், புரேவி புயல், இலங்கையின் வடக்கு நுனிப் பகுதியை மட்டுமே கடக்கிறது. முழு நிலப்பரப்பையும் கடக்கவில்லை. இதனால் புயல் முழுமையாக வலு இழக்காது. சற்று வலு குறைந்து, அதே புயலாகவே, பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும். அதாவது இரு முறை கரையை கடக்கிறது புரேவி புயல். பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையேதான், தூத்துக்குடி, ஏரல், காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், குட்டம், உவரி, திசையன்விளை, ராதாபுரம், கூடங்குளம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
மழைக்கு வாய்ப்பு
புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தென் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரைக்கும், தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடல் போன்ற பகுதிகளுக்கு அடுத்து வரக்கூடிய மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அமைச்சர், ஆர்பி உதயகுமார் அளித்த பேட்டியில், புயல் குறித்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது என ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் கன மழை
இதனிடையே, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆளத்தம்பாடி, வேலூர், ஆதிரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மன்னார்குடி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. போல நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தை எதிர்கொள்ள ரெடி
அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அரக்கோணத்தில் இருந்து 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காரைக்காலில் முகாமிட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் படகுகளை பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் புயல்
இலங்கையின் கிழக்கு பகுதி நோக்கி நகர்ந்து வரும் புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் மட்டக்களப்பிற்கு அருகே கரையை கடந்து செல்லும் என்றும், சில நேரம் காற்றின் வேகம் மணிக்கு 75 கிலோமீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும் இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.