தமிழகத்தில் ஆம்னி பஸ் எப்போது முதல் ஓடத்தொடங்கும்.. உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதனால் தமிழகத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. சா வரி பிரச்சனை காரணமாக இயக்கப்படாமல் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சேவை தொடங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தாரை.திருஞானம் கூறுகையல், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட 2500 ஆம்னி பேருந்துகள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா பதிவெண் கொண்ட 1000 பேருந்துகள்உள்ளன.
ஆம்னி பேருந்து தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். ஆம்னி பேருந்துகளை இயக்குவதன் மூலம், நாள் ஒன்றுக்கு அரசுக்கு பல கோடி வரி கிடைத்து வருகிறது. அத்துடன் சுங்க கட்டணம், டீசல், வாகனம் உதிரிபாகம், டயர், இன்சூரன்ஸ் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
கொரோனா காரணமாக, கடந்த 6 மாதமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
கடந்த 7ம் தேதி முதல், ஆம்னி பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் செப்டபம்பர் வரையிலான 6 மாதத்திற்கு ஆன சாலை வரியான ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்த செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 5 மாதமாக பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் அவற்றை பழுது பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். சர்வீஸ் செய்வது, இன்சூரன்ஸ் என ஒரு பேருந்தை மீண்டும் இயக்க ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் தான் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்று அரசு கூறியிருக்கிறது. இதனிடையே 6 மாத சாலை வரியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு, வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் எந்த தீர்ப்பு வந்தாலும், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.