சென்னையில் வெயில் காலம்.. கசகசன்னு தவிக்கும் போலீஸார்.. இதோ வந்துருச்சு கறிவேப்பிலை மோர்!
போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சென்னை: மோர் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. இன்னும் 2 மாசத்துக்கு இந்த வெயிலின் பிடியில் தமிழக மக்கள் சிக்கி தவிக்க போகிறார்கள். இதில் போக்குவரத்து போலீசாரின் நிலைமையோ இன்னும் மோசம்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் அவர்கள் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை மறைந்த ஜெயலலிதா 2012ம் ஆண்டு கொண்டுவந்தார்.
ஆனால் தங்களுக்கு எலுமிச்சம் பழச்சாறுக்கு பதில் மோர் வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்ற ஜெயலலிதாவும், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் என 4 மாசத்துக்கு போக்குவரத்து போலீசாரின் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க உத்தரவிட்டார்.
அந்த வகையில் இன்று போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டத்தினை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். கறிவேப்பிலை மணத்துடன் கூடிய ஜில் மோர் பாக்கெட்டுகளை கமிஷனர் எடுத்து தர போலீசார் அதை வாங்கி குடித்தனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போக்குவரத்து போலீசாருக்கு இன்று முதல் 4 மாதங்களுக்கு மோர் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.