வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சி பூங்கா.. வண்டலூரில் மீண்டும் திறப்பு
வண்டலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மறு சீரமைப்பு முடிவடைந்து வண்ணத்து பூச்சி பூங்கா பொதுமக்களின் பார்வைக்காக இன்று திறந்து விடப்பட்டது.
2015 ஆண்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வண்ணத்துப்பூச்சிக்கென தனி பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இதனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வண்ணத்துப் பூச்சி
இதில் பிரத்யேகமாக பூங்காவில் 200 வகையான தாவரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டது. அந்த பூங்காவில் 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வந்து செல்கின்றன என்றும், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் இந்த வண்ணத்துப்பூச்சிகள் வருவதாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
சீரமைப்பு பணிகள்
ஆனால் 2016 -ல் வந்த வர்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா அடியோடு சேதமடைந்தது. மேலும் அதற்காக அமைக்கப்பட்ட இல்லமும் வெகுவாக
பாதிக்கப்பட்டது. இதனால் வண்ணத்துப் பூச்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன.
இன்று திறக்கப்பட்டது
இதற்காக வண்ணத்து பூச்சி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பூங்கா இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதற்காகவே புதிதாக செடிகளும் நடப்பட்டு உள்ளன. தற்போது வண்ணத்துப்பூச்சிகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கி இருக்கின்றன.
வட்டமிடுகின்றன
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் இந்த பூங்காவில், கண்ணை கவரும் வகையில் வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவை வட்டமிட்டு வருகின்றன.