டாப் கியர் போட்டு மேலே வந்த எடப்பாடியார்.. பாமக பக்க துணை.. வீழ்த்தப்பட்ட திமுக.. 2 வெற்றி
எடப்பாடியாரின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது
Recommended Video
சென்னை: டாப் கியர் போட்டு மேலே வந்துவிட்டார் எடப்பாடியார்.. இனி யாராலும் அவரை அசைக்க முடியாத நிலையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டார்!
நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக அரசின் மவுசை கூட்டி உள்ளது. பொதுவாக, இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறும் என்பது தமிழகத்தில் வழக்கமானதே. அது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பலிக்கவில்லை. இதனால் அதிமுகவினர் சோர்ந்திருந்தனர். ஆனால் இப்போது மறுபடியும் வெற்றிப் பாதைக்கு அதிமுக திரும்பி விட்டது.
வேலூர் தேர்தலில் பார்த்தோமானால், கடைசி நாட்களில் மத்திய அரசின் 370, முத்தலாக் போன்ற விவகாரங்கள் பெரியதாக பேசுபொருளாக மாறியது. அதன் மூலம் தாக்கம் ஏற்பட்டு, ஒரு மாற்றமும் வந்தது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு பேசு பொருள் இல்லை. இதுதான் அதிமுகவின் முதல் சக்ஸஸ்!
நாங்குநேரியும் போச்சு.. விக்கிரவாண்டியும் காலி.. தக்க வைக்க முடியாத திமுக.. கூட்டணி என்னாகும்?
ராமதாஸ்
கூட்டணி தரப்பினரை எடுத்து கொண்டாலும் அபரிமிதமான ஒத்துழைப்பு அதிமுகவுக்கு கிடைத்தது. குறிப்பாக பாமக! தங்களின் ஒட்டுமொத்த பலத்தையும் அதிமுகவுக்கு ஆதரவாக திருப்பிவிட்ட பெருமை டாக்டர் ராமதாஸையே சாரும்.. அதேபோல, பஞ்சமி சமாச்சாரத்தை கொண்டு வந்து திமுகவை திசை திருப்பி அதன் வீரியத்தை குறைக்கும் சாணக்கியத்தனமும் ராமதாஸிடம் இருந்ததை காண முடிந்தது.
உட்கட்சி பூசல்
உட்கட்சி பூசல் ஆயிரம் இருந்தாலும், அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டது எடப்பாடியாருக்கு பெருத்த மகிழ்ச்சிதான். வாக்குபதிவு முடிந்ததும், எடப்பாடியார், ஒரு தனி டீமை அனுப்பி, இரு தொகுதி நிலவரத்தை கண்டறிந்து வர சொல்லி உள்ளார். அதிமுகவுக்கே சாதகம் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல, உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் கேட்டுள்ளார். அந்த ரிப்போர்ட்டும் 2 தொகுதிகளில் இருந்து சாதகமாகவே வந்துள்ளது. அதன்பிறகுதான் முதல்வர் முகத்தில் மலர்ச்சி தென்பட்டதாக சொன்னார்கள். இப்போது எக்கச்சக்க பூரிப்பில் உள்ளார்.
பிரதமர்
நாங்குநேரியில் ஜாக்கிரதையாக பிரச்சாரத்தை முடித்து காட்டி சாதுர்யமாக நடந்து கொண்டார் எடப்பாடியார். அதே சமயம் பிரதமரை தமிழகம் வரவழைத்து காட்டி.. எந்தவித அதிருப்தியின் சாயல்கூட இல்லாமல் பாஜகவுடனான நெருக்கத்தை காட்டி கூட்டணி பலத்தை நிரூபித்தார் எடப்பாடியார். சீன அதிபரின் வருகையானது மக்கள் மனதில் நல்ல தாக்கத்தை தந்துள்ளதும் மறுக்க முடியாத உண்மையே.. தண்ணீராக தொகுதிக்குள் பணப் பட்டுவாடாக்கள் நடந்தாலும், எடப்பாடியாரின் செயல்பாடுகளும் இப்போதைய இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
மாஸ் கூட்டணி
இப்போது அதிமுக கூட்டணி மாஸ் கூட்டணி என்ற பெயரை திரும்பவும் பெற்றவிட்டது.. இதே கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.. ஓபிஎஸ்ஸின்-ன் உராய்வுகள் ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலாவின் வருகை பீதி இன்னொரு பக்கம் இருந்தாலும், தனக்கு எதிராக சில மூத்த அமைச்சர்களின் நாசூக்கான காய் நகர்த்தல் தன்மை இருந்தாலும்.. எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கிவிட்டு மேலே வந்து நின்றுவிட்டார் எடப்பாடியார்.
சாதகம்
இனி வரும் ஒவ்வொரு சவாலும் திமுகவுக்கு மிக மிக கடினமாகவே இருக்கும். காரணம், வெற்றியைச் சுவைத்து விட்ட அதிமுக பாமக கூட்டணி இனி எந்த ஒரு வாய்ப்பையும் திமுகவுக்குக் கிடைக்க விடாமல்செய்ய என்னவெல்லாம் உண்டோ அதையெல்லாம் முயற்சிப்பார்கள். குறிப்பாக பாமக விடவே விடாது.. அந்த அளவுக்கு திமுக மீது கடுமையான கோபத்தில் உள்ளது. இது அதிமுகவுக்கே சாதகம் என்பதால் இந்தக் கூட்டணி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கலக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.