நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு?
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நாளை, அதாவது அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிடுகிறார். திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து இரு தொகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நடிகர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.நாங்குநேரியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்காக, 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குசீட்டுகள் பொருத்தப்படும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இதேபோல, புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் கட்சி உள்பட 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை அங்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கும்கூட நேற்று, மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.