சீக்கிரமே தமிழகத்தில் இடைத் தேர்தல்? இரு தொகுதிகள் காலி.. சட்டசபை செயலாளர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில், திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய, இரண்டு சட்டசபை தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் அதிகப்படியான இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில், கடந்த லோக்சபா தேர்தலையொட்டி மினி சட்டசபை தேர்தல் என்று அழைக்கப்பட்ட கூடிய அளவுக்கு 22 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றதும் அடங்கும்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், எம்எல்ஏக்கள் மரணம் போன்றவை இதுபோன்ற இடைத்தேர்தலுக்கு மக்களை இழுத்துச் சென்றுள்ளன. இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணமடைந்தார். இதனால் திமுக எம்எல்ஏக்கள் இன் பலம் 98 ஆக குறைந்துள்ளது.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டு மே 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இன்னும் சுமார் 14 மாதங்கள் மட்டுமே பொதுத்தேர்தலுக்கான அவகாசம் உள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டசபை செயலாளர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதன் மூலமாக இரண்டு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஆறு மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே பொதுத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒரு இடைத் தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களது முழு திறனையும் காட்டி பணியாற்ற முடியாது. மீண்டும் பொதுத் தேர்தலை உடனே அவர்கள் சந்திக்க நேரிடும். இது அவர்களுக்கு இரட்டிப்பு செலவாகும். எனவே அனைத்து கட்சிகளுமே இடைத்தேர்தல் வேண்டாம் என்று ஒரே குரலில் சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து இடைத்தேர்தல் வேண்டாம், நேரடியாக பொதுத்தேர்தலுக்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.