முஸ்லீம்களுக்கு ஒன்னுன்னா வருவேன்னு சொன்னீங்களே.. எங்கே போயிட்டீங்க.. வைரலான #வீதிக்குவாங்கரஜினி
வீதிக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிறது
Recommended Video
சென்னை: "முஸ்லீம்களுக்கு ஒன்னுன்னா முதல் ஆளா குரல் கொடுப்பேன்னு சொன்னீங்களே.. இப்போ வீதிக்கு வாங்க ரஜினி" என்று சோஷியல் மீடியாவில் ரஜினிக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றன.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் போராடினர்.. இதன்காரணமாக நேற்றிரவு முதலே தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.. கலவரம், தடியடி, தள்ளுமுள்ளு, கைது, விடுவிப்பு என செய்திகள் வருகின்றன.
போலீசாரும் பெரிய அளவில் வன்முறை வெடித்துவிடாமல் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். எனினும் தலைவர்களின் கண்டனங்கள், பொதுமக்களின் கோபங்கள் குறையவில்லை.
சுயலாபம்
இந்த சமயத்தில், குறிப்பாக இந்த விவகாரத்தில் ரஜினியை சிலர் கேள்வி கேட்டுள்ளனர்.. "குடியுரிமை சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததே இதற்கு காரணம்.
ஹேஷ்டேக்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.. இதுதான் இஸ்லாமிய மக்களை மேலும் கொதிப்பில் ஆழ்த்தி வருகிறது.. இதனால் போராட்ட சூழலின் நீளமும் தொடர்கிறது.. தமிழக இஸ்லாமிய மக்கள் ஆற்றாமையில் உள்ளனர்.. இந்த சமயத்தில் ரஜினி எங்கே போனார், எங்களுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னாரே, எங்கே? வீதிக்கு வாங்க ரஜினி என்று ஹேஷ்டேக் போட்டு அழைக்க தொடங்கி உள்ளனர்.
சீமான், தா.பாண்டியன்
முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினி சொன்னபோதே, சீமான் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.. "முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமை சம்பந்தமாக குரல் கொடுத்தீர்களா? ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உபியில் எரித்துக் கொன்றதற்கு குரல் கொடுத்தீர்களா? ஆசீபாவை கோயிலுக்குள் வைத்துக் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கு குரல் கொடுத்தீர்களா? அமீர்கான் போன்ற உச்சபட்ச திரை நட்சத்திரங்களே இசுலாமியர் என்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது குரல் கொடுத்தீர்களா? எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்? எப்போதுதான் வாய் திறப்பீர்கள்? என சீமான் கேட்ட கேள்விக்கு இன்றுவரை ரஜினியிடம் இருந்து பதில் வரவில்லைதான்.
சேட்டைகள்
இதையே சற்று காட்டமாக கூறியிருந்தார் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், "இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்ல இவர் யார்? சட்டமன்ற உறுப்பினரா? கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான் அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது... இவர் திரையில் செய்கிற சேட்டைகளை பார்த்து அவர் சினிமாவுலகில் வேண்டுமானால் முதலிடம் பிடித்திருக்கலாம். அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை" என்றார்.
வன்முறை
தலைவர்கள் இப்படி ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து முழுசா ஒரு வாரம்கூட ஆகியிருக்காது.. அதற்குள் தமிழகத்தில், அதுவும் ரஜினிகாந்த் குடியிருக்கும் சென்னையிலேயே கலவரம் வெடித்துள்ளது.. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக தூண்டிவிடுகிறார்கள் என்று ரஜினி சொல்லியிருந்தார்.. அந்த வகையில், நேற்றிரவு நடந்த வன்முறையில் எந்த அரசியல் கட்சி தலைவர்களின் பெயரும் அடிபடவில்லை.. இது முழுக்க முழுக்க முஸ்லிம் அமைப்பினர் முன்னெடுத்த போராட்டம் என்றே சொல்லப்படுகிறது.
|
வீதிக்கு வாங்க
அதனால்தான் "வீதிக்கு வாங்க ரஜினி" என்று ஹேஷ்டேக் தொடங்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது... "குரு மூர்த்தி எழுதி தரத மட்டும் தான் இந்த ரோபோ பேசும்.." என்றும்,"ஒரு பேச்சுக்கு, முஷ்லீம்களுக்கு முதல் ஆளா குரல் குடுப்பேன்னு சொன்னதுக்கா இந்த டேக் #வீதிக்குவாங்க_ரஜினி போடுறாங்க" என்றும், "உங்கள் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா....உங்கள் உடல்பொருள்ஆவி தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா அதனால... வீதிக்கு வாங்க ரஜினி" என்று ட்விட்டர்வாசிகள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
இதற்கு ரஜினி என்ன சொல்ல போகிறார் என தெரியவில்லை.. அதேபோல, "ரஜினி கரெக்டாதான் சொல்லி உள்ளார், அவருக்கு என் பாராட்டுக்கள்" என்று அன்று ட்வீட் போட்ட எச்.ராஜா என்ன சொல்ல போறார் என்று தெரியவில்லை!