குடியுரிமைச் சட்டம்... ரஜினி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? - கார்த்தி சிதம்பரம்
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை ரஜினி ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடும், கருத்தும் குழப்பமாக உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மத்திய அரசு செல்கிற திசை பலருக்கும் பல நேரங்களில் வருத்தத்தை அளிக்கும் வகையிலேயே உள்ளதாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ரஜினி கருத்து
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை இரவு வன்முறை தீர்வாகாது என்ற கருத்தை ட்வீட்டரில் பதிவு செய்தார் ரஜினி. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதிருப்தி தெரிவித்ததோடு யார் வன்முறை செய்வது என்பதை ரஜினி விளக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
குழப்பம்
இந்நிலையில், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ரஜினியின் நிலைப்பாடும், கருத்தும் தமக்கு புரியவில்லை என்றும், அது குழப்பத்தை தருகிறது எனவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சட்டத்தை ரஜினி ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது பற்றி அவர் தான் தெளிவாக கூறவேண்டும் என்றார்.
பலருக்கும் வருத்தம்
மத்திய அரசு செல்கிற திசையும், பாதையும், நாட்டில் பல நேரங்களில் பலருக்கும் வருத்தத்தை தந்துள்ளதாகவும், அதற்கு உதாரணமாக பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., காஷ்மீர் விவகாரம், முத்தலாக் தடை, இந்தி திணிப்பு என பல விவகாரங்களை கூறலாம் எனத் தெரிவித்தார்.
கட்சிபேதமின்றி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணிக்கு கட்சி பேதமின்றி மாணவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.