போராட்டம் நடக்கப் போவதாக பரவிய தகவல்.. பெசன்ட் நகர் பீச்சுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவிய நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்க எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறையும் வெடித்துள்ளது.
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் இப்படித்தான் மெரினா கடற்கரையில் திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள் பல லட்சம் இளைஞர்களை ஒற்றிணைத்து போராட்டம் நடத்தி கடைசியில் ஜல்லிக்கட்டுக்காக சட்டசபையை கூட்டி சட்டமே இயற்ற வைத்தனர்.
இதனிடையே போராட்டம் குறித்த தகவலால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்வதற்கு போலீசார் தடை விதித்தனர். விடுமுறைய கொண்டாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமையான இன்று பலரும் வந்த நிலையில் கடற்கரையை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சமூக வலைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்த 100க்கும் மேற்பட்டோர், பெசன்ட்நகர் பேருந்து பணிமனை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.