ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத அமைதி தீபாவளி!
-லதா சரவணன்
தீபாவளி... எந்தவிதமான ஆராவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான தீபாவளி
நண்டும் சிண்டுமாய் தன்னையொரு காவல் அதிகாரியைப் போல எண்ணிக்கொண்டு குட்டித் துப்பாக்கி மூலம் பட்டென்று சுட்டு மகிழும் காலம் போய் பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கும் ஆப்பு சுமந்த அமைதி தீபாவளி இரண்டு மணிநேரத்தில் பட்டாசு வைக்கவேண்டும் மீறினால் தண்டனை இப்போது ஒரு குற்றப்பதிவு செய்தாகிவிட்டது. ஒரு வாட்ஸ்ப் அப் வீடியோவில் ஒரு பெண்மணி நீதிமன்றத்திற்கு போன் செய்கிறார் எப்போது குளிப்பது, அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, முறுக்கு எப்போது சுடுவது என்றெல்லாம் வெகு அக்கறையாய் அந்த வீடியோவைப் பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும் இந்தமாதிரி நிலைமை எதிர்காலத்தில் நிச்சயம் வந்தாலும் வரும் என்பதை உணர முடியாமலும் இல்லை,
அதேபோல் பட்டாசு வெடிக்கும் நேரத்தினை கணக்கிடுவதைப் போல மதுபானக் கடையில் விற்பனை நேரத்தையும் கணக்கிட்டு ஒரு பதிவு ! பட்டாசின் நேரம் குறைவு சுற்றுச் சூழல் அக்கறை எனில் மதுபானக் கடைகளை மூடுவதைக் குறித்து யோசிப்பதும் ஒரு சமுதாய அக்கறைதானே !
இன்று நாம் என்ன வாங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாம் இல்லை, எல்லாவற்றிற்கும் எதையாவது சார்ந்து யாருடைய கட்டளைகளையாவது ஏற்று அடுத்தவீடு பற்றியெறிந்தால் பரவாயில்லை நம் வீடு காப்பதைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டு, இப்படி அநேக சுயநலக்கிளைகளை வளரவிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
நம்மைத் தீண்டும் ஒவ்வொரு ஆபத்திற்கும் ஏதாவது ஒரு மாற்றுச் சக்தி வந்துவிடுகிறது. முன்னொரு காலக் கதை ஒரு காட்டில் புலி ஒருவனைத் துரத்தும் அதிலிருந்து தப்பிக்க வஅவன் ஒரு மரத்தில் ஏறுவான் அங்கே ஒரு மலைப்பாம்பு அவனை விழுங்கக் காத்திருக்கும் அந்த மரத்தில் இருக்கும் தேனடையில் இரண்டு தேன் சொட்டும் அதை விழுங்கியவன் அந்தச் சுவையிலேயே தன் உயிருக்கு நேர விருக்கும் ஆபத்தை மறப்பான். அப்படித்தான் இப்போது மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மழைநீர் விரயமாகி கடலுக்கு போகிறது. அணை கட்டத்தோன்றவில்லை நமக்கு ! சிலைகள் கட்டிக்கொண்டு இருக்கிறோம். ஏதோவொரு நெருங்கடி மனிதர்களை ஆட்வித்து எதிலும் சுவாரஸ்யம் இல்லாமல் ஆக்கிவிடுகிறது.
பண்டிகைள் காலையில் கைபேசியில் இணையவெளியில் குவிந்திருக்கும் வாழ்த்துக்களுக்கு படுக்கையில் இருந்து கொண்டே பதிலிட்டு விடுகிறோம் பெரும்பாலும் தியேட்டரின் இருட்டிலும், டிவித் திரைகளுமே நம்மை ஆக்கரமித்துக் கொள்கிறது.
அன்றைய பண்டிகைகள் மனம் மகிழ்வித்தன, இன்றைய பண்டிகைகள் செவி மகிழ்விக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கும் போது எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அக்கறையான அன்றைய பொதிகை எச்சரிக்கைகளும், உறவுகளோடு ஒன்றாக இணைந்து பட்டாசு சப்தத்திற்கு சுணங்கிணாலும் அதன் வண்ணங்களில் மயங்கி திரிந்ததும், நேத்தைக்குப் பட்டாசு வெடிச்சோம் செம ஜாலியா இருந்தது அதிலும் அந்த புஸ்வானமும் சங்கு சக்கரமும்
ஏன்பா நீங்க ராக்கெட் எல்லாம் வெடிக்க மாட்டீங்களா ?
அய்யய்யோ எனக்கு பயம் நான் வெறும் மிளகாய் வெடிதான் வெடிப்பேன்
ஆமா ஆமா அதற்கே கையைச் சுட்டுக்கொள்கிறாய் ?
வீட்டுப் பலகாரங்களும் அதன் சுவைகளும், விளையாட்டான விமர்சனங்களும், முதல் நாள் அணிந்த பண்டிகை கால ஆடைகளைப் பற்றியும், இலேசுபாசாக முறைமாமன் முறைப்பெண்ணின் வெட்கங்களும், காதலின் சிலிர்ப்பும் என
அன்றைய பள்ளி கல்லூரிகளில்தான் அங்கலாய்ப்பதற்குத்தான் எத்தனை கதைகள் ?!
முகம் அறியா நபருக்கு கூட இன்று வாழ்த்துக்கள் சொல்கிறோம் வெறும் கடமைக்காக ?! இப்படியொரு வெற்றுத் தீபாவளி கொண்டாடப்போகிறோம் என்று கிருஷ்ணனுக்கு அன்றே தெரிந்திருந்தால் நிச்சயம் நரகாசுரனை மன்னித்திருப்பாரோ என்னவோ. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தங்கள் குடும்பங்களைக் காணவென்றே ஊர் புறப்பட்டு வரும் உறவுகளை வரவேற்கும் உருக்கம் மிகுந்த காட்சிகள் எல்லாம் இன்று டிவிப்பெட்டிக்குள் தான் வருகிறது.
பண்டிகைக் காலங்களில் எண்ணெய் குளியல் எப்படியோ அப்படித்தான் மருதாணி இடுதலும், பெண்கள் தங்கள் விரல்கள் மருதாணியிட்டு சிவப்பதற்கும் அதனால் தன் இணையின் மேல் உள்ள அன்பை தெரிவிப்பதைப் போல ஒரு மரபு இன்றைய காலகட்டத்தில் நம்ம இயலாமல் போனாலும், இம்மாதிரி சின்ன சின்ன நிகழ்வுகள் அன்பின் நெருக்கம் ஏற்பட உதவும் ஆனால் சென்றவாரம் ஒரு பேமஸ் தொலைகாட்சித் தொடர் ஒன்றில் கதாநாயகிக்கு இப்படியொரு காட்சி அவர் வைக்கும் மருதாணியில் வீட்டுப் பெண்களில் ஒருத்தி அலர்ஜி ஏற்படும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதைக் காண்பிக்கிறார்கள். இதேபோல் தீபாவளிப் பலகாரம் செய்யும் பதத்தை கெடுப்பது போல் இன்னொரு காட்சி இப்படி இன்னும் வக்கிரங்களையும் பிடிக்காதவர்களுக்கு எப்படியெல்லாம் தீங்கு செய்யலாம் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகும் தொடர்கள் ஏராளம்.
தீபாவளியா ?! அப்படியா ? என்று பாக்யராஜ் படத்தில் வரும் அதிர்ச்சி பைத்தியம் போலத்தான் நம் நிலையும் ஆகிக்கொண்டே போகிறது.
அதிக அலங்காரமில்லாத ஜவுளிக்கடையில் ஒரு மங்கலான கண்ணாடியில் தேர்வு செய்த ஆடைகளை போட்டு போட்டு பார்த்து மகிழ்ந்தது எங்கே இப்போது கண்கவர் விளக்கொளியில் அரண்மனைப் போன்ற கடையிலிருந்தும் டிரையல் ரூம் பக்கம் போக நம்பிக்கையின்றி போவது எங்கே ? இன்றைய விழாக்காலங்கள் கடமையாகிப் போய்விட்டது. இனி பட்டாசு வெடிப்பதற்கும், அதிகாலை பொங்கல் வைப்பதற்கும் ஒரு ஆப் வந்து விடும் தீபாவளிக்கு ஊருக்கு போயே தீரணுமா என்ன ? ஸ்கைப்பில் பார்த்து பேசிக்கலாம் அதிலும் இப்போது வாட்ஸ்அப் வீடியோ கால்ஸ் இருக்கு அது போதும் பத்துநிமிடத்தில் நம் உறவுகளின் வாழ்த்துக்களை பெற்றுவிடலாம்
வார்த்தை சுருங்கிவிட்டதைப் போல இப்போது வாழ்த்துக்களும் சுருங்கிவிட்டது தித்திப்பான தீபாவளி இன்று திரிகள் இல்லாத பட்டாசைப் போல நமத்துப் போயிருக்கிறது.
இருந்தாலும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!