வசதியான வண்டி.. குளுகுளு ஏசி.. சொகுசான இருக்கைகள்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் "ரதங்கள்"!
சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதற்கா முஸ்தீபுகளில் கட்சிகள் இறங்கியுள்ளன. அதில் ஒன்றாக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வாகனங்களும் ரெடியாகிக் கொண்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் என்றாலே நாடே களை கட்டிக் காணப்படும். தலைவர்களின் புயல் வேகப் பிரச்சாரம் அதில் முக்கியமானது. நேரில் பார்க்காத அத்தனை தலைவர்களையும் மக்கள் நேரில் பார்க்க இது ஒரு வாய்ப்பு (இது மட்டுமே ஒரே வாய்ப்பும் கூட). அந்த வகையில் இன்னொரு திருவிழா நெருங்கி விட்டது.
இந்த நிலையில் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய சொகுசான வாகனங்கள் புயல் வேகத்தில் தயாராகிக் கொண்டுள்ளன. கோவையில் வைத்து முக்கிய தலைவர்களின் வாகனங்கள் தயாராகி வருகின்றனவாம்.
பாமக, தேமுதிக.. இரு முனைத் தாக்குதலைத் தடுத்து தகர்க்க திமுக பலே திட்டம்!
கோவையில் சொகுசு
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவர்களுக்காக கோவையில் பிரத்யேகமான முறையில் சொகுசு வாகனங்கள் தயாராகி வருகின்றன. கோவை சிவானந்த காலனியில் செயல்பட்டு வரும் கோயாஸ் நிறுவனத்தில் அதற்கான பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகின்றன.
ஸ்டாலினின் பென்ஸ்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் பென்ஸ் நிறுவன வேனின் உள்கட்டமைப்பை சகல வசதிகளுடன் மாற்றியதும் கோயாஸ் நிறுவனம் தான். மேலும், ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள கனிமொழி உள்ளிட்டோருக்காக டெம்போ டிராவலர் வேன் கேரவன் வசதிகளோடு நவீனமயமாக மாற்றியமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாம்.
முதல்வர், துணை முதல்வருக்கு தனித் தனி
இதுபோக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்காக தனித் தனி வாகனங்கள் ரெடியாகி வருகிறது. ஓ.பி.எஸ்,-இ.பி.எஸ். ஜெ.பாணியில் தமிழகம் முழுவதும் டூர் அடிக்க உள்ளதால் அவர்களுக்கான பிரச்சார வாகனங்களை பார்த்து பார்த்து வடிவமைக்கின்றனர் கோவை அதிமுகவினர்.
சகல வசதிகள்
இந்நிலையில் கோயாஸ் நிறுவனத்தை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது, முதல்வர்,துணை முதல்வருக்காக பிரத்யேக முறையில் டி.வி., ஓய்வுபடுக்கை, உள்ளிட்ட வசதிகளோடு பிரச்சார வாகனத்தை உருவாக்கி வருவதாகவும், வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர், ஜீப் உள்ளிட்ட வாகனங்களை ஆல்டர் செய்து கொடுக்கக்கோரி பல கட்சிகளில் இருந்தும் ஆர்டர்கள் குவியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்கள்.