4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..மே 1 முதல் - 8 வரை தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் மே 1-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்குகிறார். இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, மே 1-ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை துவக்க உள்ளார் ஸ்டாலின்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில், வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட உள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து மே 3 மற்றும் 4 தேதிகளில், திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் மே 5 மற்றும் 6 தேதிகளில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
மே 7 மற்றும் 8 தேதிகளில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின். இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, தொகுதி பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்
களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்
தற்போது திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் மாலையில் சூலூர், அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.