பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவுமா? சிக்கன், முட்டை சாப்பிடலாமா? முழு விளக்கம்
சென்னை: பறவை காய்ச்சல் பரவல், இப்போது நாட்டின் பல மாநிலங்களில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டன.
இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் 1996ல் பதிவாகியது. அதன் பின்னர், பல பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்கள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் முதல் கேஸ்கள் 2006ல் மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் பதிவாகியுள்ளன.
பறவைக் காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதோ அது தொடர்பான ஒரு பார்வை:
பறவைக் காய்ச்சல் என்றால் என்ன?
பறவைக் காய்ச்சல் என்பது வைரஸ் தொற்று காய்ச்சல் ஆகும், இது பெரும்பாலும் பறவைகளை தாக்குகிறது. இந்த நோய் இன்ஃப்ளூயன்ஸா டைப்-ஏ வைரஸால் ஏற்படுகிறது. பொதுவாக காடு மற்றும் பண்ணைக் கோழி பறவைகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் பல வகைகளுடையவை. அவற்றில் பெரும்பாலானவை லேசான அறிகுறிகளை மட்டும் ஏற்படுத்துகின்றன. முட்டை உற்பத்தியை பாதிக்கின்றன. இருப்பினும், சில வகைகள் அபாயகரமானவை. தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது, H5N1 மற்றும் H8N1 வைரஸ் வகையாகும்.
நாய், குதிரைகள்
வாத்துகள் போன்ற நீர்வாழ் பறவைகளில் உள்ள பறவைகளின் கழிவுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்களை கடத்தக் கூடியது. நோய்த்தொற்றின் முதன்மை காரணம் இதுதான். நீர் பறவைகளிலிருந்தே பெரும்பாலும் நிலப்பரப்பு பறவைகளுக்கு நோய் பரவுகிறது. பல நாடுகளை தாண்டி இப்பறவைகள் பறந்து செல்வதால் போகும் இடங்களில் பரப்புகிறது. பன்றிகள், குதிரைகள், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற பாலூட்டிகளுக்கும் சில சமயங்களில் இந்த பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று பரவக் கூடும்.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?
பரவும். எச் 5 என் 1 வைரஸ் வேறு உயிரினங்களைத் தாண்டி, பாதிக்கப்பட்ட பறவையிலிருந்து மனிதர்களைப் பாதிக்கும். மனிதர்களில் எச் 5 என் 1 நோய்த்தொற்றின் முதல் கேஸ் 1997ம் ஆண்டில் ஹாங்காங்கில் ஒரு கோழி பண்ணை தொழிலாளியிடம் பதிவானது. இருப்பினும், இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவிய பிறகு மனிதர்களிடம் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட பறவைகளுடன் பழகுபவர்கள் கோழிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இறப்பு விகிதம்
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 60% என்ற அளவில் உள்ளது. 2006 மற்றும் 2018 க்கு இடையில், மொத்தம் 225 பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகள் சந்தித்துள்ளன. 83.49 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ரூ 26.37 கோடி இழப்பீடு வழங்கியது அரசு.
சிக்கன், முட்டை சாப்பிடலாமா?
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எச் 5 என் 1 வைரஸ் மனிதர்களிடம் பரவுவது குறைவாக உள்ளது என்று மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் ஏ.எஸ்.ரனாடே, தெரிவித்துள்ளார். காரணம்? நமது உணவுப் பழக்கம்தான். இந்தியாவில் பெரும்பாலான இறைச்சி மற்றும் முட்டை தயாரிப்புகள் நன்கு சமைக்கப்படுகின்றன. வைரஸ் அதிக வெப்பநிலையில் வாழ முடியாது. 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலைக்கு ஆளானால் வைரஸ் உடனடியாக இறந்துவிடும். தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டை இரண்டும் நன்கு சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. இந்தியாவில் சிக்கன் மற்றும் முட்டை 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பப்படுத்தப்படுகிறது. இதனால் கோழி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதானவை , என்கிறார். எனவே ஆப்-பாயிலை விட, ஆம்லேட் நல்லது மக்களே.