சிஎல்ஆர்ஐ மான்களை இடமாற்றம் செய்யலாமா?.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள மான்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தடைவிதிக்க கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன. இந்த மான்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் இந்த மான்களை பிடிக்கவும்,வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இங்கிருக்கும் மான்களை பிடித்து கிண்டி தேசிய பூங்காவுக்கும், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கும் மாற்றப்பட்டதில், 10 மான்கள் இறந்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
கட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக!
தற்போது 70 மான்களை மேற்கு தொடர்ச்சி மலையில் விட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல் மான்களை இடமாற்றம் செய்வது தவறு என மனுதாரர் வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் உத்தரவிட்டார்.