இப்படி செய்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வு வெற்றி சாத்தியம்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்
சென்னை : நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் 12ம் வகுப்பு படித்துவிட்டு ஓராண்டு கோச்சிங் சென்டருக்கு சென்று படித்தவர்கள் ஆவர். எனவே அரசு நீட்டுக்கு என்றே ஒரு கோர்ஸ் ஆரம்பித்து கட்டணம் இல்லாமல் தனியார் தரும் அதே கோச்சிங்கை 9ம் வகுப்பில் இருந்து கொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் டாக்டர் ஆவது எளிதாக இருக்கும்.
தனியார் கோச்சிங் சென்டர்களில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பதே மிகவும் மோசமானதாகும். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்பதால் வாய்ப்புகளும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
வசதி உள்ளவர்கள் மட்டுமே டாக்டர் ஆக கோச்சிங் சென்டருக்கு போய் படிக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமையும் கூட. நாடு முழுவதும்நீட் தேர்வை கொண்டுவந்த மத்திய அரசு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு. 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் ஒரே பாடத்திட்டத்தை கொண்டுவராமல் இருப்பது மிகப்பெரிய முரண். இதில் சிபிஎஸ்இ மாணவர்களுக்குத்தான் பலன் அளிக்கிறது. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், ஓராண்டை வீணடித்தால்தான் சாத்தியம் என்ற நிலை உள்ளது.
நீட் மாணவர்கள் குவியும் கோட்டா சிட்டி.. 5000 கோடி பிசினஸ்.. எப்படி சாத்தியம்?
பெரியகுளம் மாணவர் முதலிடம்
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், பெரியகுளம் சில்வார்பட்டி மாணவர் ஜிவத்குமார் என்ற மாணவர் தான் இந்தியாவில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மாணவர் ஆவார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்துதான் ஜீவித் குமார் பயிற்சி எடுத்துள்ளார். இதற்கு முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா உதவி செய்துள்ளார். அந்த மையத்திற்குத் தேவையான கட்டணத்தை வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். இப்படி தனியார் உதவியுடன்தான் இந்த நீட் தேர்வை எதிர்கொண்டு வென்றிருக்கிறார். இது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது என்பதே எதார்த்தமான உண்மை.
சிபிஎஸ்இ முறைப்படி தேர்வு
இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவ கல்வி இடங்களும் உள்ள தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என்றால் லட்சங்களை செலவு செய்து ஓராண்டை வீணடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் பணக்காரர்கள் எதையும் வீணடிக்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் கற்பதே சிபிஎஸ்இ பாடத்திட்டம் தான். அந்த தேர்வு முறைப்படி தான் முழு கேள்விகளும் இடம் பெறும். தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம், இந்தியா முழுவதும் மருத்து கல்வி கனவை சமப்படுத்துகிறோம் என்று கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களை பாதிக்க அனுமதிக்கக்கூடாது.
ஏழை மாணவர்களுக்கு தேவை
தனியார் கோச்சிங் சென்டர்களில் தரும் பயிற்சி வசதிகளை ஏழை மாணவர்களுக்கும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. இதை கேட்டு பெறவது என்பது நம் மாணவ்ரகளின் உரிமையும் கூட. எந்த இடற்களையும் சந்திக்காமல், பண வசதி உள்ளவர்கள் நீட் தேர்வில் பாஸ் ஆனாலே டாக்டருக்கு படிக்க முடியும்- ஆனால் பல லட்சம் பேர் போட்டியிடும் ஒரு தேர்வில் கிராமப்புற மாணவன் அதிக மதிப்பெண் எடுத்து வென்றால் மட்டுமே மெரிட்டில் டாக்டருக்கு படிக்க போக முடியும். ஏனெனில் அவனால் லட்சங்களையோ, கோடிகளையோ கொட்டி, டாக்டருக்கு படிக்க முடியாது. இது அரசுக்கும் நன்கு தெரியும்.
கேட்க வேண்டும் அரசு
அரசு பள்ளி மாணவர்கள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இன்று வரை இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஏன் என்று கேட்ககூட முடியாத நிலையே இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு துணிந்து செயல்பட்டால் மட்டுமே இந்த ஆண்டாவது கொஞ்சம் அரசு பள்ளி மாணவர்களாவது டாக்டர் ஆவார்கள். இல்லாவிட்டால் அதுவும் சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
தன்னார்வலர்களை ஊக்குவிக்கலாம்
நீட் தேர்வு ஒழிக்கப்படுமா ஒழிக்கப்படாது என்பது தெரியாது, நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சி வசதிகளை உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். நீட் பயிற்சியை தினசரி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் தன்னார்வ நிறுவனங்களையும் ஈடுபடுத்தலாம். இலவசமாக பயிற்சி தர முன்வருவோரை ஊக்குவிக்கலாம் இப்படி செய்தால் நிச்சயம் நம் மாணவர்கள் டாக்டர் ஆகும் நினைவு ஆகும். இல்லாவிட்டால் வழக்கம் போல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் வெல்வதற்கு மட்டுமே நீட் தேர்வு வழிவகுக்கும்.