"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
விகே சசிகலா ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தன்னுடைய முடிவை விரைவில் அறிவிக்க போகிறாராம்
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. பல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், விகே சசிகலா என்ன முடிவெடுக்க போகிறார் என்ற ஆர்வமும் அவரது ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்...பாமக யாருக்கும் ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
மூன்று சிக்கல்
அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அறிவித்துள்ளார் டிடிவி தினகான்... நாம் தமிழர் கட்சியும் முதலியார் சமுதாயத்தை சேர்ந்த மேனகா என்ற பெண் வேட்பாளரை அறிவித்துள்ளது.. ஆனால் அதிமுக மட்டும் வேட்பாளரை அறிவிக்காமலேயே இருந்தது.. எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம், ஓபிஎஸ் மறுபக்கம், இதற்கு நடுவில் பாஜக என 3 தரப்புமே தனித்தனியாக கூடி கூடி விவாதித்து கொண்டிருந்தார்கள்.. இந்த ஆலோசனைகள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், பாஜக ஆதரவு யாருக்கு? அல்லது போட்டியிட போகிறதா? என்ற ஆர்வமும் அதிகரித்தபடியே இருந்தது..
தென்னரசு
95 சதவீதம் கட்சி தன்னிடம்தான் உள்ளது என்று சொல்லி கொள்ளும் எடப்பாடி தரப்பே வேட்பாளரை அறிவிக்காமல் இருந்ததுதான், பலராலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. உடனே ஓபிஎஸ்ஸும் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார்.. பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவேன் என்று ஏற்கனவே ஓபிஎஸ் உறுதி தந்திருந்த நிலையில், பாஜக வேட்பாளரை தங்கள் வேட்பாளரை திரும்ப பெற தயார் என்று நேற்றைய தினமும் அறிவித்துள்ளார்..
ரெடியாகிறார் சசி
தேவைப்பட்டால் தினகரனை சந்திக்க தயார் என்று ஒவ்வொருமுறையும் செய்தியாளர்களிடம் சொல்லி வரும் ஓபிஎஸ், தனக்கான ஆதரவை டிடிவி தினகரனிடம் கேட்பார் என்றும், ஓபிஎஸ்ஸுக்காக தினகரனும் தன்னுடைய ஆதரவை நிச்சயம் தருவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், "உறுதியாக சசிகலாவிடம் ஆதரவு கேட்போம்" என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.. அப்படியானால் சசிகலா என்ன செய்ய போகிறார்? ஆதரவு தருவாரா? இடைத்தேர்தல் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை எப்போது அறிவிக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
ஆச்சரிய களம்
ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே சசிகலா கருத்து கூறியிருந்தார்.. அதுமட்டுமல்லாமல், "27ம் தேதி பிறகு வேட்பாளரை அறிவிப்பேன்" என்று செய்தியாளர்களிடமே சசிகலா கூறியிருந்ததால், அது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. காரணம், பிரிந்தவர்களையும், கட்சியையும் ஒன்றிணைப்பேன், அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று ஒரு வருட காலத்துக்கும் மேலாகவே சபதம் போட்டு வருகிறார் சசிகலா.. எனவே, இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி, எடப்பாடி + ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயற்சி மேற்கொள்வார் என்றும் அதிமுகவில் நம்பினார்கள்.
இலை யாருக்கு
அதனால்தான், வேட்பாளரை அறிவிக்க போவதாக சொல்லவும், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. இப்போது விரைவில் தன்னுடைய முடிவை சசிகலா அறிவிக்க போகிறாராம்.. அநேகமாக ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என்கிறார்கள்... சசிகலாவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருக்க காரணம், நாளை உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தொடர்பான வழக்கு விசாரணை நடக்க இருக்கிறது. அதில் எந்த மாதிரியான முடிவு வர இருக்கிறது? யாருக்கு இரட்டை இலை செல்ல இருக்கிறது? என்பதை பார்த்த பிறகே சசிகலா, ஓபிஎஸ் சந்திப்பு இருக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது...
மெயின் புள்ளி
இந்த வார இறுதியில் இவர்களின் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவை தந்தால், வேட்பாளரை சசிகலா அறிவிக்க வாய்ப்பிருக்காது என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த ஒரு வருட காலமாகவே, அதாவது கடந்த வருடம் தேவர் ஜெயந்தி நிகழ்வின்போதிருந்தே, ஓபிஎஸ் + சசிகலா இரு தரப்புமே சந்திக்க போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.. எனினும் அந்த சந்திப்பு தள்ளிப்போய் கொண்டே வருகிறது.
25 எம்எல்ஏக்கள்
அடுத்த சில நாட்களில் இவர்கள் சந்திக்க போவதாக கூறப்பட்டு வருகிறது.. ஏற்கனவே 25 அதிமுக எம்எல்ஏக்கள், சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாகவும், திவாகரன் மூலம் அவர்கள் காய்நகர்த்தல்களை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவுடன் ஓபிஸ் டீம் இணையும் பட்சத்தில், ஓபிஎஸ்ஸுக்கே கூடுதல் பலம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.. ஆக மொத்தம், ஓபிஎஸ் + சசிகலா + தினகரனை மூவரையும் இணைப்பதற்கான ஒரு புள்ளியாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் ஆருடம் சொல்கிறார்கள்..!!