அட்வைஸ் தேவையில்லை.. எங்களுக்கு தெரியும்.. சிடி ரவிக்கு அதிமுக நிர்வாகி பதில்.. பாஜக நிர்வாகி பதிலடி
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி இன்று தெரிவித்த நிலையில் அவருக்கு அக்கட்சி நிர்வாகி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி இன்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்தார். அதன்பிறகு சிடி ரவி கூறுகையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புகளைச் சந்தித்தோம் என்றார். இந்நிலையில் தான் சிடி ரவியின் பேச்சுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‛நீங்களாம் அட்வைஸ் தரலாமா' எனும் வகையில் அதிமுக நிர்வாகி கடுமையாக அவரை விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கு பாஜகவின் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் ட்விட்டரில் மோதல் தொடங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்னும் உச்சநீதிமன்றம் வழங்காத நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை தங்களுக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கோரியிருந்தனர்.
ஈரோடு கிழக்கில் போட்டியிட தயங்கும் பாஜக! பின்வாங்குவது ஏன்? அண்ணாமலை - சிடி ரவி சொன்னது என்ன?
ஓபிஎஸ், இபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பு
இதில் பாஜக இன்னும் முடிவு எடுக்கவில்லை. தொடர்ந்து முடிவு எடுக்க தாமதம் செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தென்னரசை வேட்பாளராக அறிவித்தார். ஓ பன்னீர் செல்வம் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் பாஜகவுக்கு இருவரும் பிரஷர் கொடுத்தனர். மேலும் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிரதமர் மோடி, அண்ணாமலையின் படங்கள் இன்றியும், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை மாற்றி தேர்தல் பணிமனையில் வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
சிடி ரவி சந்திப்பு
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தனர். அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த சந்திப்பினை அவர்கள் நிகழ்த்தி இருந்தனர்.
சிடி ரவி சொன்னது என்ன?
இதுபற்றி சிடி ரவி கூறுகையில், ‛‛தீயசக்தி திமுகவை வீழ்த்த 1972ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். தற்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புகளைச் சந்தித்தோம்'' என்று தெரிவித்தார். அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் விரும்பாத நிலையில் சிடி ரவி இப்படி கூறியுள்ளார். இந்நிலையில் தான் சிடி ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பாஜகவா இருந்தா என்ன வேணா சொல்லலாமா?
இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜீ ராமச்சந்திரன், சிடி ரவியை கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அதிமுக எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூற பாஜகவின் சிடி ரவி யார்? தேசியக் கட்சி என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கிறீர்களா? இங்கு சிடி ரவி அறிவுரை வழங்கியது போல கர்நாடக பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாங்களும் அறிவுரை வழங்கலாமா?. இது சரியாக இருக்குமா?.
30 ஆண்டு ஆட்சி செய்த அதிமுக
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி செய்த நிலையில், திமுகவை தனியாக எதிர்த்து ஒருமுறை கூட ஜெயிக்காத நீங்கள் எப்படி எங்களுக்கு அறிவுரை கூற முடியும் என நினைக்கிறீர்கள்? தீயசக்தி யார் என்றும், 1972ல் எம்ஜிஆர் எதற்காக இந்த கழகத்தை தொடங்கினார் என்றும் நீங்கள் தான் எங்களுக்கு சொல்லி தர வேண்டுமா?. உங்களது வரம்புகளை அறிந்து செயல்டுங்கள்'' என காட்டமாக சாடியுள்ளார்.
பாஜக எதிர்ப்பு
இதற்கு தற்போது பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛பாஜகவின் எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017ல் டெல்லி வழிகாட்டுதல்படி இணைந்தீர்கள். அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்?. சிடி ரவி கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது'' என பதில் கருத்து பதிவிட்டுள்ளார். தற்போது ட்விட்டரில் இருவரின் பதிவுக்கும் அந்தந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.