சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்க.. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நீட் தேர்வை தாமதமின்றி உடனே ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் கடும் மன அழுத்தம் தருவதாக நீட் தேர்வு அமைந்துள்ளது என சாடியுள்ளார்.
2019-2020-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது நடப்பாண்டு தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத வேதனையில் திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா மற்றும் மோனிஷா என்ற மூன்று மாணவிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்டனர். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அதில் நீட் தேர்வு சமூக நீதியை சிதைக்கும் கொடூர ஆயுதமாக உள்ளது என்பதை நடப்பாண்டு நடந்து முடிந்த நீட் தேர்வு நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா காண்பிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி அனுமதி!
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கட்டாயத்தின் காரணமாக அதிகரித்திருந்தாலும், எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி என்ற தொலைநோக்குடன் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது என கூறியுள்ளார்.
அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா என தொடங்கிய நீட் பலிகள் இந்த ஆண்டு ரிதுஸ்ரீ, வைஸ்யா, மோனிஷா, என நீண்டு கொண்டே செல்கிறது. எனவே சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு, நீட் தேர்வே இல்லாத நிலையை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிராமப்புற ஏழை, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாணவ, மாணவியருக்கு மிகக்கடும் சவால்கள் நீட் தேர்வின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தேவையின்றி வேகம் காட்டுகிறது. மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்து, ஏற்றத்தாழ்வை நீட் வளர்க்கிறது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரும் போது தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்.
எனவே நீட் தேர்வை தாமதமின்றி ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவும் திமுக பாடுபடும் என கூறியுள்ளார்.