அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் ரத்து.. அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வி துறை
Recommended Video
சென்னை: அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்விக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு இதுவரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சமீத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நாட்குறிப்பேடுகள் வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை அப்போது வெளியிட்டிருந்தார்
இந்நிலையில் ஆங்கில வழிக்கல்வி கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பான அரசாணை பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணத்தை ரத்து செய்வது, அதில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு வழி ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தேசிய அளவில் ஆங்கில மொழியில் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை, மாணவர்கள் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்றும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்று 2019-20-ம் கல்வியாண்டில் ஆங்கிலவழி கல்வியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 22,316 மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம் ரூ.67 லட்சத்தை திரும்ப ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றி நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பினருக்கும் ஆங்கில வழி கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.