என்னது பிரேமலதா பிரச்சாரமா.. வேண்டாம் சாமி.. ஆளை விடுங்க.. தெறித்து ஓடும் கூட்டணி வேட்பாளர்கள்
Recommended Video
சென்னை: பிரேமலதா விஜயகாந்த் போகுமிடமெல்லாம் தப்புத் தப்பாக பேசி மக்களின் முகச் சுளிப்பை சம்பாதித்து வருவதால் அவரது பிரச்சாரம் என்றால் கூட்டணி வேட்பாளர்கள் அதிருப்தி அடைந்து பின்வாங்குகிறார்களாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது. இதனால் தேமுதிகவின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தனது கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி பிரச்சாரத்தில் உளறி வருவதால் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இவரது பிரச்சாரம் என்றாலே தெறித்து ஓடுகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும்போதெல்லாம் சிலர் பிரச்சாரங்களில் காமெடி செய்வது வழக்கம். ஆனால் சிலரது பிரச்சாரமே காமெடியான கதைகளும் உண்டு. இது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களே இப்படி காமெடி ஷோவாக மாறிப் போனது வேறு கதை. இப்படி பொதுக் கூட்டங்களையும், இப்போது பிரச்சார மேடைகளையும் காமெடி கூத்தாக்குவதில் தன்னிகரில்லாமல் திகழ்வது தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது இவருக்கு போட்டியாக வருவாரோ என்ற அளவில் பிரேமலதாவின் பிரச்சாரங்கள் இருப்பதாக கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.
கன்னியாகுமரியில் பிரசாரத்தின்போது தொடர்ந்து ஹாரன் அடித்ததால் பிரேமலதா கோபம்
விஜயகாந்த் உடம்பு சரியில்லை
தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக ஒன்றை ஒன்று நெருங்கி கூட்டணி பேச்சு வார்த்தைகள் தொடங்கிய சூழலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாததால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து இறங்கியதும் அவரால் உடனடியாக வீட்டுக்கு செல்ல இயலவில்லை. விமான நிலையத்திலேயே பல மணி நேரம் ஓய்வு எடுத்தார்.
விஜயகாந்த் இல்லாதது பலவீனம்
அப்போதே அவரது கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் அவரது உடல்நிலை நன்றாகவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.
பின்னர் கூட்டணிகள் வேகம் பிடித்த சூழலில் ஒவ்வொரு கட்சி தலைவர்களாக அவரை சென்று சந்தித்து வந்தார்கள். சிலர் அவரது உடல் நலனை "அக்கறையோடு" விசாரிக்க சென்றதாக கூறிக்கொண்டார்கள். அப்போது ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட வீடியோக்களில் அவர் பேசுவது இடம் பெறவில்லை.
விஜயகாந்த் வரவே இல்லையே
இப்படி இருக்கும்போது கூட்டணி அமைந்து விட்டால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார் பழைய பன்னீர் செல்வமாக அவர் திரும்பி வருவார் என்று கூட்டங்களில் கர்ஜிப்பார் என்றெல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேமுதிக தரப்பில் அவர் வரமாட்டார் அவருக்குப் பதிலாக பிரேமலாதா வருவார் என்று கூறப்பட்டது. அப்போதே விஜயகாந்த் கட்சியின் முகமே விஜயகாந்த் ஒருவர்தானே என்றெல்லாம் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே முனுமுனுப்பு எழுந்தது.
பிரேமலதா வேண்டாம்
இருந்தாலும் கூட்டணி அமைத்து விட்டோமோ என்று வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள். பிரேமலதாவும் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். இப்போது இதில்தான் பிரேமலதா பிரச்சாரமா அய்யோ வேண்டாம் என்று கூட்டணி கட்சியினர் தெறித்து ஓடுவதாக செய்திகள் வருகின்றன.
பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்போது தெளிவாகத்தான் ஆரம்பிக்கின்றார். அதன் பின்னர்தான் பிரச்சனையே ஏற்படுகின்றது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.
தாறுமாறாகப் பேசுகிறார்
பேச்சின் வீச்சு அதிகமாகும்போது எதிர்கட்சிகள் ரேஞ்சுக்கு இறங்கி ஆளும்கட்சியினரையே காய்ச்சி எடுத்து விடுகின்றார். இதனால் கோபத்தின் உச்சியில் உள்ளனர் ஆளும்கட்சியினர். இந்த நிலையில் கோவையில் பிரச்சாரம் செய்த பிரேமலதா புல்வாமா தாக்குதலை நடத்தியதே மோடிதான் என்றார். எதிர்கட்சியினரும் இதையேதான் கூறி வருகிறார்கள். தேர்தலுக்காக இந்த தாக்குதலை நடத்தியதே இவர்கள்தான் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியின் முக்கியத் தலைவரான பிரேமலதா இப்படி பேசியது பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது.
மக்கள் சிரிக்கிறார்கள்
வழக்கமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று அவரது கூட்டங்களிலும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவகங்கை தொகுதியில் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது பேச ஆரம்பித்த பிரேமலதா அமைச்சர் விஜய பாஸ்கரை குட்கா புகழ் விஜய பாஸ்கர் என்று குறிப்பிட்டார். அப்போது அமைச்சர் விஜய பாஸ்கரும் பக்கத்திலேதான் இருந்தார். இதை கேட்டுக் கொண்டிருந்த மக்களும் சிரித்து விட அமைச்சர் உட்பட அதிமுகவினர் கடுமையாக டெண்சனாகிவிட்டனர்.
தப்புத் தப்பாக பேசுகிறார்
இது ஒருபுறம் என்றால் செல்லுமிடங்களில் எல்லாம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசும்போது அவர்களது பெயர்களையும், சின்னங்களையும் தப்பும் தவறுமாக பேசி கிச்சு கிச்சு மூட்டி வருவதால் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பிரேமலதா பிரச்சாரம் என்றாலே கிலியடித்து கிடக்கின்றனர். இப்போது பிரேமலதா பிரச்சாரத்திற்கு வருகிறார் என்றாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகின்றனர்.
நான் பாண்டிண்ணே
முன்பு இப்படித்தான், விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது ஏகப்பட்ட தப்புகள் நடந்தன. பாண்டி என்ற வேட்பாளரின் பெயரை பாஸ்கர் என்று கூறினார். வேனுக்குள்ளேயே போட்டு வேட்பாளரை அடித்தார். இப்போது கிட்டத்தட்ட பிரேமலதாவும் இதேபோல தப்புத் தப்பாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் மகன் விஜய பிரபாகரனும் தாறுமாறாக பேசி வருகிறார்.. ஒருவேளை இதுதான் தேமுதிக பாரம்பரியமோ!