ஓடும் காரில் திடீர் தீ.. தப்பி குதித்து உயிர் பிழைத்த 4 பேர்.. சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு
சென்னை: சென்னையில் ஓடிக்கொண்டிருந்த கால் டாக்ஸி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஓஎம்ஆர் சாலை, கொட்டிவாக்கம் பகுதியில் இந்த விபத்து இன்று பிற்பகலில் நடைபெற்றது. டாடா இண்டிகா காரை, சுந்தரராஜன் என்ற டிரைவர் இயக்கினார்.
அதில் மூன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த கார் கேகே நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால், கொட்டிவாக்கம் பகுதியில் கார் வந்தபோது திடீரென முன் பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.
அதற்குள், மளமளவென்று முன் பகுதியிலிருந்து காரின் பிற பகுதிக்கும் தீ பரவியது. இதை பார்த்த டிரைவர் மற்றும் சக பயணிகள், காரில் இருந்து வெளியே குதித்து தப்பினர்.
கன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி
இதையடுத்து துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தொலைபேசி மூலமாக தகவல் அளித்தனர். தகவல் அறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதற்குள் ஏறத்தாழ முக்கால் வாசி கார் பகுதி எரிந்து விட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் சுட்டெரிக்க கூடிய சூழ்நிலையில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் இந்த காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். காரில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.