ஆனந்த பைரவி.. அமிர்த வர்ஷினி ராகம்... மழை வேண்டி சென்னையில் 12 மணி நேரம் இசை கச்சேரி
சென்னை: மழை வேண்டி சென்னையில் 150க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
போதிய மழை இல்லாமல் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஹாலிவுட் நடிகரே, சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு மாறியது.
சென்னையில், மழை எப்போது தலைகாட்டும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக, கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு மிதமான மழை பெய்தது. இந்தநிலையில், பெரும் மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்ப வேண்டும், குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என மத வேறுபாடு இன்றி கோவில், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை தியாகராயநகரில் உள்ள ஸ்ருங்கேரி மடத்தில் சர்வதேச கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில், மழை வேண்டி இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், பாம்பே சகோதரிகள், நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
அனைவரும் இணைந்து மழை தரும் என கூறப்படும் ராகங்களான அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட ராகங்களை ஒரே குரலில் பாடினர். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 9 மணி வரை, 12 மணி நேரம் நடைபெற உள்ளது.
தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, மழைவேண்டி யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கிய கோவில்களில் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாகம் நடத்தி வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.